Home Blog Page 3106

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 18 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது. சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த விளையாட்டு விழாவில் வழமைபோல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன் களமிறங்குகின்றன.

ஆண்கள்இ பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு முதலான குழு விளையாட்டுக்களும், இளையோருக்கான தடகளப்போட்டிகளும் இடம்பெறவிருக்கின்றன. இவற்றுடன் கயிறு இழுத்தல், குறிபார்த்துச்சுடுதல், சங்கீதக்கதிரை என்பனவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கண் கட்டி அடித்தல், தலையணை அடிச்சமர் போன்றனவும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளன.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களை விளையாட்டுத்துறையில் மேம்பாடடையச் செய்வதோடுஇ அவர்கள் மத்தியில் தாயகம் குறித்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே தமிழர் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வழமையை விட இவ்வருடம் மிக அதிக அணிகள் பங்கேற்க முன்வந்திருக்கின்றன என்றும் – இது புலத்திலுள்ள தமிழ் இளையோர் மத்தியில் விளையாட்டுத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது.

 

 

 

 

 

பிரித்தானியாவின் கரோ நகரசபை முன்னாள் முதல்வருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சிறீலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோவுடன் இணைந்து பிரித்தானியாவின் கரோ பகுதி நகரசபையின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறீலங்கா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவரும் கரோ நகரச-பையின் முன்னாள் முதல்வருமான கரீமா மரிக்கர் மீது கரோ நகரசபை ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை நகரசபை அதன் இணையத்தளத்திலும், பத்திரிகையிலும் பிரசுரித்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் பெர்ணான்டோ தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிவேண்டி அமைதியான வழியில் போராடிய தமிழ் மக்களை நோக்கி படுகொலை செய்வோம் என உடல்மொழியினால் பெர்ணான்டோ எச்சரித்திருந்ததும், அதற்கு எதிராக தமிழ் மக்கள் பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததும் நாம் அறிந்தவையே.

ஆனால் தமிழ் மக்கள் அதிகம் வாழும் கரோ பகுதியில் முன்னர் நகரசபைத் தலைவராக பணியாற்றிய தொழிற்கட்சியைச் சேர்ந்த மரிக்கர், நகரசபையின் முதல்வருக்குரிய சங்கிலியை அணிந்தவாறு பெர்ணான்டோவுடன் இணைந்து புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட்டு தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுமாறு நடந்து கொண்டதற்கு எதிராக மேற்கொண்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்தே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரசபை உறுப்புரிமைச் சட்டத்தின் 5 ஆவது சரத்தை மரிக்கர் மீறி-யுள்ளதாகவும் இது நகரசபைக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் எனவும் விசாரணைகளை மேற்கொண்ட செயற்குழு தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பெயர்பலகைகள் அகற்றப்பட்டன.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

இந் நிலையில் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த பௌத்த துறவிகள் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து.கடந்த 05.06.19 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை இப்பகுதியில் முன்னெடுத்துள்ளார்கள். இன்னிலையில் கடந்த 11.06.19 அன்று அமைச்சர் மனோகணேசன் அவர்களும் இப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.03 7 வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பெயர்பலகைகள் அகற்றப்பட்டன.

இந்த இடத்தில் குருகந்த ரஜமகாவிகாரை என பௌத்த துறவியாலும் நீராவியடிப்பிள்ளையார் என கிராம மக்களாலும் பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது.

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட இரண்டு பெயர்பலகைகளில் ஒரு பெயர்பலகைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஒரு பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை.

மற்றைய இந்த பெயர்பலகை அந்த இடத்தில் நாட்டுவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி தேவை என்ற நிலையில் (14.06.19) இன்று குறித்த இடத்திற்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த ரஜமகாவிகாரையின் பெயர் பலகையினையும்,நீராவியடிப்பிள்ளையார் ஆலய ஒரு பெயர்பலகை ஒன்றினையும் அகற்றியுள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொலிசார்,மற்றும் நீதிமன்ற அதிகாரிகள்,மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்திற்கு குறித்த இரண்டு பதாகைகளும் காணப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 11 முறைப்பாடுகளும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் ரிஷாத் பதியுதீனுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் எதிராக கூட்டாக முன்வைக்கப்பட்ட ஒரு முறைப்பாடும் மூவருக்கும் எதிராக கூட்டாக முன்வைக்கப்பட்ட இரு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இதன் படி முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, உதய கம்மன்பில, பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உட்பட 11 பேர் முறைப்பாடு செய்துள்ளனர். அஸாத் சாலிக்கு எதிராக பாஹியங்கல ஆனந்த தேரர் உட்பட ஐவரும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ரீ. நகுலேஸ்வரன் உட்பட இருவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்களை பதவி விலகுமாறு கோரி ரத்தன தேரர் உண்ணாவிரதம் இருந்ததையயடுத்து இரு ஆளுநர்களும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் அண்மையில் பதவி விலகியிருந்தனர். இந் நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,

முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்காக கடந்த 4 ஆம் திகதி மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணி வரை இதற்காக காலக் கெடு வழங்கப்பட்டிருந்தது.நேற்று பிற்பகல் 3 மணி வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

விருது விழா; தமிழ் கலைஞர்களை விண்ணபிக்க கோருகிறார் அமைச்சர் மனோ

“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, என்ற தலைப்பில் இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் கலைகளை ஊக்குவிக்கும் அரச விருது விழாவை நடத்துவிக்க தனது அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், இந்த விருது விழாவில் விருதுகளை பெற நாடெங்கும் கலைப்பணியாற்றும் தமிழ் கலைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளதாவது,

இவ்விழாவை நடத்தும் பொறுப்புகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சின் இந்து சமய கலாச்சார திணைக்களத்திற்கு வழங்கியுள்ளேன்.

எழுத்து, பாடல், வாத்தியம், நாட்டியம், அறிவிப்பு, நெறியாள்கை, புகைப்படம், சினிமா, கிராமியக்கலைகள், சிற்பம், நுண்கலைகள் ஆகிய மற்றும் இங்கே சொல்லப்படாத அனைத்து கலைத்துறைகளையும் சார்ந்த, 18 வயதிற்கு குறையாத அனைத்து மூத்த, நடுத்தர, இளம் தமிழ் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.

வருடாந்தரீதியாக நடத்துவிக்க தீர்மானிக்கபட்டுள்ள இந்த தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழாவின், இவ்வாண்டுக்கான விருது விழா ஆகஸ்ட் 24ம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து, பாரம்பரிய மற்றும் நவீன கலைகளை ஊக்குவிக்கும் வருடாந்த அரச விருது விழாவை நடத்துவிக்க எனது அமைச்சு அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை நான் வழங்கியுள்ளேன்.

இந்த விழாவிற்கான விண்ணப்பங்களை, கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு தலைமையகம், கொழும்பு பம்பலபிட்டியில் அமைந்துள்ள இந்து சமய கலாச்சார திணைக்களம், பிராந்திய அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் www.hindudept.govt.lk எனும் தளத்திலும், சமூக ஊடகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப இறுதி திகதி: 20-07-2019. விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்: பணிப்பாளர், இந்து சமய கலாச்சார திணைக்களம், 248-1/1 காலி வீதி.

மூன்று கண்கள் என்ற புலனாய்வுத்துறைக் கட்டமைப்பு உருவாக்கம்

சிறீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மூன்று கண்கள் என்ற புதிய புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதன் முதலாவது கூட்டம் மூடிய அறைக்குள் சிறீலங்காவில் இந்த மாதத்தின் முதல் வாரம் இடம்பெற்றதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியா தலைமையில் சிறீலங்கா மற்றும் மாலைதீவு இணைந்து பிராந்திய புலனாய்வுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பின் முதலாவது கூட்டம் சிறீலங்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த புலனாய்வு அதிகாரிகள் சிறீலங்காவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இரண்டு நாட்கள் மூடப்பட்ட அறைக்குள் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயற்படுவது, அதனை முறியடிப்பது, மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

ஓவ்வொரு ஆறு மாதமும் கூட்டங்கள் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் பின்னர் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு கோயம்புதூரில் வைத்து முகமட் அசாருதீன் (32) என்ற நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் சிறீலங்காவில் குண்டுத் தாக்குதலை தலைமை தாங்கிய சஹரானுடன் முகநூல் ஊடாக தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த இணைந்த பிராந்திய புலனாய்வுக்கட்டமைப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அகதிகளை திருப்பி அனுப்புவதை சிறீலங்கா நிறுத்த வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

அகதிகளாக தஞ்சமடைந்தவர்களை பலவந்தமாக அவர்களின் நாடுகளுக்கு அனுப்புவதை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும், இது அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும் என அனைத்துலக மன்னிப்புச் சபை நேற்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மை மதத்தவரான சியா மற்றும் கிறிஸ்த்தவர்கள் சிறீலங்காவில் அகதிகளாக தஞ்சடைந்திருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

அவர்களைத் தடுத்து வைத்துள்ள சிறீலங்கா அரசு தற்போது அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதுகாப்பற்ற நாட்டுக்கு அவர்களை மீண்டும் பலவந்தமாக அனுப்பும் செயல் அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும்.

அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து நேரலாம். இரண்டு தடவைகள் இடம்பெயரும் நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அகதிகள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தடிகள், கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்த வன்முறையளர்கள் அகதிகள் தங்கியிருந்த இடத்தின் முன் நின்று அவர்களை பலவந்தமாக வெளியெறுமாறு கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

கையில் கிடைத்த பொருட்களை எடுத்தவாறு அகதிகள் காவல்நிலையங்களிலும், அருகில் உள்ள சமூகநல நிலையங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால் அவர்களை அவர்களின் நாட்டுக்கு பலவந்தமாக அனுப்புவதற்கு சிறீலங்கா அரசு முயன்றுவருவது இது அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் கோர முகத்தை சிறிலங்காவில் பார்த்தேன் கஜகஸ்தானில் இந்தியப் பிரதமர் மோடி

தான் சிறிலங்கா சென்றிருந்த போது, பயங்கரவாதத்தின் கோரமுகத்தைக் கண்டதாக இந்தியப் பிரதமர் மோடி, கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் தெரிவித்தார். இதற்கு எஸ்சிஓ நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள்  மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே மோடி மேற்படி தெரிவித்தார்.

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பயங்கரவாதியின் சடல எச்சங்களை புதைக்க இடம் தேடும் காவல்துறை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால், காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர்.

தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்களை மரபணு பரிசோதனை செய்து அவருடையது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உடலை அரச செலவில் அடக்கம் செய்யும்படி கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இதையடுத்து சடலம் ஆலையடி இந்து கிறிஸ்தவ மயானப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட போது மக்களின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனையடுத்து காத்தான்குடி முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது அப்பிரதேச மக்கள் எதிரப்புத் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்ன இராணுவ முகாமிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப் பகுதியில் புதைப்பதாக இருந்த போது அங்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, சடல எச்சங்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தொடரூந்து விபத்து – மூவர் பலி

கொழும்பில் உள்ள கொல்பிட்டி பகுதியில் தொடரூந்து மோதியதால் மூவர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அளுத்கம பகுதி நோக்கிச் சென்ற தொடரூந்தே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் சிறீலங்கா கவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளர்.