பயங்கரவாதியின் சடல எச்சங்களை புதைக்க இடம் தேடும் காவல்துறை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால், காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர்.

தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்களை மரபணு பரிசோதனை செய்து அவருடையது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உடலை அரச செலவில் அடக்கம் செய்யும்படி கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இதையடுத்து சடலம் ஆலையடி இந்து கிறிஸ்தவ மயானப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட போது மக்களின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனையடுத்து காத்தான்குடி முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது அப்பிரதேச மக்கள் எதிரப்புத் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்ன இராணுவ முகாமிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப் பகுதியில் புதைப்பதாக இருந்த போது அங்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, சடல எச்சங்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.