இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா என்ற போதைப் பொருள் வடபகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இனிப்பு வகையான பொருட்களுடன் பெரிய பை ஒன்றில் கஞ்சாவை கொண்டு சென்ற மாணவன் யாழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டார். ஆனால் பாடசாலையின் பெயர் பாதிக்கப்படும் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மெதம்பிரமைன் என்ற இராசாயணப் பெயர் கொண்ட போதைப் பொருள், கஞ்சா, மற்றும் பீடி இலைகள் என்பன கேரளம், மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து வடபகுதிக்கு கொண்டுவரப்படுகின்றன.
பாடசலை சிறுவர்களிடம் இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அதனை தடுக்க சிறீலங்கா காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் யாழ் செயலகத்தின் சிறுவர் உதவி பிரிவின் அதிகாரி ஏ உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரியாலை பகுதியே போதை பொருள் கடத்தப்படுவதன் தலைமையகமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு 3800 கிலோ கேரள கஞ்சா, 739 கிலோ கெரோயின், 8 கிலோ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கஞ்சா, 42000 கிலோ பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாள 7000 ஆள்கடல் மீன்பிடிப் படகுகள் தொழில் ஈடுபடும் கடலில் தேடுதல் நடத்துவது கடினம் என சிறீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடல் பகுதிக்கு கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் பணப் பரிமாற்றம் இடம்பெறும் வரை அங்கு மறைத்துவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, போதைப்பொருள் பாவனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் யாழில் தாக்கப்படுகின்றனர்.
நம்பிக்கை இல்லம் என்ற புனர்வாழ்வு நிலையத்தை நடத்திவரும் வின்ஸ்சன் பற்றிக் அடிகளார் அவர்களை கடந்த செப்ரம்பர் மாதம் 23 ஆம் நாள் கடத்திச் சென்ற இருவர் ஏன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக குரல் கொடுக்கின்றீர்கள் எனக் கேட்டு பலமாக தாக்கியபின்னர் அவரை இராசாவின்தோட்ட வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த வருடம் யாழ் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதை கண்டறிந்த ஆசிரியர் அதனை தடுக்க முற்பட்டபோது மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். எனினும், பாடசாலையின் தரம் கருதி அதனை நிர்வாகம் மறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) காலையும் யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு பகுதியில் 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதே இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் படகில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மேலும் இருவர் சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்தள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி இங்கு 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள்.
உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கள்ளிக்குளத்தின் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் மக்களின் நிலைமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30 வருடகாலமாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் ‘காற்றில் அகப்பட்ட பஞ்சு போல்” வடக்குக்கிழக்குத் தமிழ் மக்களை அதிகளவில் பாதித்ததுடன் அவர்களைப் பல வருடங்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டுப் பல்வேறு பகுதிகளுக்கு துரத்தியிருந்தது.உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த அம்மக்கள் யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மீள்குடியேற்றம் என்பது கிள்ளித்தெளிக்கும் நடவடிக்கையாகவே இருப்பதாகச் சந்தேகம்கொள்ள வைக்கிறது. கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் குடியிருக்கும் இளம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் அடிப்படை வசதிகள் ஏதுமின்றியும் குடிப்பதற்கு நீரின்றியும் பெரும் துன்பத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.
காட்டு யானைகள்,கரடி மற்றும் பாம்பு போன்ற விலங்குகளின் தொல்லைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இரவில் ஒன்றாக ஒர் இடத்தில் கூடி உறங்குகிறார்கள். பகலில் தங்கள் கொட்டில்களில் உணவு தயாரித்து உண்கிறார்கள். தங்கள் வீடுகளைக் கற்களாலும் களிமண்ணாலும் அமைத்திருக்கும் மக்கள் இந்த நாகரீக உலகத்தைவிட்டு வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.
வவுனியாவில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வீட்டுத்திட்டங்களில் அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டுப் பல வீடுகள் இன்றும் கட்டப்பட்ட நிலையில் காடுவத்தி வெளவால்களும் குரங்குகளும் வாழ்ந்து வரும் நிலையில் உண்மையில் வீடு தேவைப்படும் மக்கள் காடுகளுக்குள் துரத்தப்பட்டுள்ளனர்.நல்லாட்சி அரசு உருவாகி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காகவே தனி அமைச்சும் உருவாக்கப்பட்டு வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்ப்பட்ட நிலையிலும் கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்களின் நிலைமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தத்தின் கொடுமையால் பல இடங்களிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் அகதிமுகாம்களிலும்,உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்து கள்ளிக்குளம் கிரமத்தின் காட்டுப்பகுதியில் குடியேறிய பின் அரச அதிகாரிகளிடமும் அரசியல் வாதிகளிடமும் சென்று தங்கள் நிலைமையைத் தெரிவித்தும் இன்னும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு எங்களை அவர்கள் மனிதர்களாகவே மதிக்கவில்லையென கவலையும் வெளியிட்டனர்.
கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் குடியிருக்கும் மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின்நிலைமையை கேட்றிந்தபோது
எஸ். குகதாசன் கருத்துத் தெரிவிக்கையில்,
நுவரெலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் வவுனியாவில் திருமணம் முடித்துள்ளேன். இருப்பதற்கு ஒரு வீடு இல்லாத காரணத்தினால் இந்தக் காட்டுப்பகுதிக்குக் குடி வந்தோம் நாங்கள் அதிகாரிகளிடம் எழுத்து மூலமாக உதவிகளைக் கோரியிருந்தபோதும் அவர்கள் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகப் பெரும் பாதிப்பை அனுபவித்து வருகிறோம். அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
யானைகளின் தொல்லை, கரடித் தொல்லையின் மத்தியில் எங்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் வேலைக்குச் சென்றபின் எங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் இந்தக் காட்டில் தனியாகவே இருக்கின்றனர் தினமும் பயத்துடனே எமது வாழ்க்கை கழிகிறது எனத் தெரிவித்தார்.
மாணவனான சஞ்சீவன்;
கந்தபுரம் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் நான் ஐந்து கிலோமீற்றர் நடந்தசென்றே கல்வி கற்று வருகிறேன். பாடசாலை உபகரணங்கள் இல்லாதநிலையிலும் சீருடைகள் கிழிந்த நிலையிலும்தான் எனது கல்விப் பயணம் தொடர்கிறது.பாடசாலை செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரும் பட்சத்தில் என்னால் சாதிக்க முடியும். இந்தக்காட்டுப் பகுதியில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது எங்களுக்கு வீடு இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் இருக்கிறோம் எனத் தெரிவித்தான்.
ராமையா சமந்தநாயகி;
முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு சென்று பின் அங்கிருந்து வவுனியா வந்து உறவினர் வீடுகளில் தங்கியிருந்து இருக்க இடம் இல்லாத காரணத்தினால் கள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் கடந்த 9 மாதங்களாக இருந்து வருகிறோம்.அரசாங்க அதிகாரிகளிடம் எங்கள் பிரச்சினைகளை முன்வைத்த போது அதற்கான தீர்வு எங்களுக்கு கிடைக்கவில்லை.
மீள்குடியேறிய மக்களுக்கு அரசிடமிருந்து பல உதவித்திட்டங்கள் கிடக்கப் பெறுவதாக அறிவிக்கப்படுகின்றபோதிலும் எங்களுக்கு எந்தவிதமான உதவித் திட்டங்களும் வழங்கப்படவில்லை. வவுனியா பிரதேச செயலகத்திற்கு சென்று எங்கள் நிலையை எடுத்துக்கூறியபோதும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
குழந்தைகளுடன் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவருகிறோம். மின்சார வசதிகள் இல்லை. காட்டு யானைகளின் வருகை எங்களுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதிகளோ வாழ்வாதார வசதிகளோ இல்லாத நிலையில் மழைக் காலத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.
வீட்டை கட்டுவதற்கு தகரமோ அல்லது கிடுகு போன்ற உதவிகளை பிரதேச செயலகத்திடம் கோரியிருந்தோம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் கொட்டில் அமைக்கப்படாத குடும்பங்கள் இருக்கின்றன. கொட்டில் அமைக்கத் தடிகளை வெட்டி வீடு அமைத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் காட்டு யானைகள் வந்து கொட்டிலை உடைத்து விட்டு சென்றுவிடுகின்றன. எனக் கண்ணீரோடு தெரிவித்தார்.
நிரோசன் தமிழ் நிலா;
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமணம் செய்து நான்கு மாத கைக்குழந்தையுடன் வீடில்லாத நிலையில் கள்ளிக்குளம் காட்டுப்பிரதேசத்தில் வசித்து வருகிறேன்.எனது கணவர் கூலிவேலை செய்துவரும் நிலையில் அவர் வேலைக்குப் போனபின் நான் குழந்தையுடன் தனியாகவே இந்தக் காட்டுப்பகுதியில் இருக்கவேண்டிய நிலை இருக்கிறது.
எனது கணவர் வேலைக்குச் செல்லாதவிடத்துக் குழந்தைகளின் செலவு, வீட்டுச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறோம்.இந்த நிலையில் காடுகளை வெட்டி நாங்களே வீடு அமைத்து இருப்பது எனபது முடியாத காரியமாக இருக்கிறது. எங்கள் எதிர்காலத்தை நினைக்கும் போது பயமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
மோகனதாஸ் கிருஸ்டினா;
யுத்தத்தின் காரணமாக கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்து உறவினர் வீடுகளில் தங்கியிருந்த நிலையில் இப்போது கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் வசித்து வருகிறோம்.
இன்னொருவரின் கொட்டிலில் தங்கியிருந்துதான் காடுகளை வெட்டித் துப்பரவாக்கி வீடு அமைக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம் நாங்கள் அரச அதிகாரிகளைக் கேட்பது எங்களுக்கு இந்தக் காணியை துப்பரவாக்கி தாருங்கள் என்று அவர்கள் எங்களையே துப்பரவாக்க சொல்லிவிட்டார்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்த எங்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை எனது கணவர் கூலிவேலையே செய்கிறார். எங்களிடம் பணமில்லை. இரண்டு நாட்கள் கூலி வேலைக்குச் செல்லும் எனது கணவர் இரண்டுநாட்கள் காடுவெட்டுகிறார.எங்கள் குடும்ப வாழ்க்கை கண்ணீரின் மத்தியிலேயே செல்கிறது எனக் கவலையுடன் தெரிவித்தார்.
லோறன்ஸ் சசிதேவி;
யுத்தத்தின் காரணமாக கிளிநொச்சியிலிருந்த இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்த நிலையில் உறவினர்களின் வீடுகளில் வசித்து வந்த நிலையில் இப்போது கள்ளிக்குளத்தில் வசித்துவருகிறேன.; எனது கணவர் கடந்த 2000 ஆம் ஆண்டு வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டார்.
அதன் பின் எனது ஐந்து குழந்தைகளுடன் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வந்த எனக்கு அரசினால் எந்தவிதமான உதவித்திட்டங்களும் வழங்கப்படவில்லை.கணவன் இல்லாத எனக்குச் சமூர்த்தி உதவிகள் கூட வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சென்று கூட எனது நிலைமையைத் தெரிவித்திருந்தேன.
அவர்கள் எந்தவிதமான உதவிகளையும் எங்களுக்கு வழங்கவில்லையெனத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் எனது இரண்டு பிள்ளைகள் மன்னாரில் கிறிஸ்தவ மடத்தில் படித்துவருகிறார்கள். நானும் முன்று பிள்ளைகளும் கள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் வசித்து வருகிறோம் என தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக உயிரை காப்பாற்ற போராடிய மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் முடியவில்லையென விரக்தியோடு தெரிவித்தனர்.
யுத்தகாலத்தில் பயத்துடன் வாழ்ந்ததைப்போலவே இன்றும் இந்த கள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் எமது குழந்தைகளுடன் தினம் தினம் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம்.எமது குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது எனத் தெரியவில்லை என ஏக்கத்தோடு தெரிவிக்கும் அம் மக்கள், எமது வாழ்வாதாரத்துக்கு ஏதும் உதவிகள் கிடைக்காதா என எதிர்பார்த்திருக்கின்றனர்.
இவ்வாறு தாயகத்தில் பல கிராமங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றது. இக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் இதுவரை அரசோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களே முன்வரவில்லை. இவர்களின் நிலையறிந்து வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு புலம் பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்பதே இம் மக்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
எண்பதுகளில் மனித உரிமைகள் சடடவாளர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலைப் பிள்ளைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான ஒரு கொலைப்படையில் உறுப்பினராக இருந்தமையால் இலங்கைக்கான தெரிவுசெய்யப்பட்ட தூதுவரான சி.ஏ சந்திரபிறேமாவுக்கான அங்கீகாரத்தை சுவிட்சர்லாந்து மறுக்க வேண்டும் என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயல்த்திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அந்தக் காலப் பகுதியில் தடிப் பிரியந்த என அறியப்பட்ட சி.ஏ சந்திரபிறேம 40000 பேர் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களின் ஒரு எழுச்சியின் போது சந்தேகநபர்களை இலக்கு வைப்பதற்கு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய நிழல் ஆயுதக்குழுக்களில் ஒன்றான மக்கள் புரட்சிகர சிவப்பு இராணுவம் அல்லது பி.ஆர்.ஆர்.ஏ இன் முக்கிய உறுப்பினராக இருந்தார்.
பி.ஆர்.ஆர்.ஏ கொலைகள் மற்றும் வலிந்து காணாமற்போதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக அறிக்கைகளை அந்தக் காலப்பகுதியில் வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் பணியாளர்கள் உட்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு பி.ஆர்.ஆர்.ஏ வழமையாக கொலை மிரட்டல்களை விடுத்தது. 1989 இல் சரித்த லங்காபுர மற்றும் காஞ்சனா அபயபால ஆகிய இரண்டு மனித உரிமைகள் வழக்கறிஞர்களின் படுகொலைகள் தொடர்பில் சந்திரபிறேம 2000 ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டார்.
தடுப்புக்காவலில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி பகிரங்கமாக இணையத்தில் கிடைக்ககூடிய இருக்கும் ஒரு வாக்குமூலத்தில் சந்திரபிறேமாவை குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு கொலையாளி எனக் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் மேற்கொண்டு தொடர்வதற்கு சட்டரீதியான எந்த ஆதாரங்களும் இல்லை என சட்டமா அதிபர் தீர்மானித்ததையடுத்து சந்திரபிறேம விடுதலை செய்யப்பட்டார். அதிலிருந்து இலங்கையிலுள்ள அனைத்துப் பெரிய அரசியல்கட்சிகளுடனான அவரது தொடர்புகள் மூலம் அவர் பாதுகாக்கப்பட்டுவருகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை கொண்ட அமைப்பான மனித உரிமைகள் பேரவையில் துணிச்சலான மனித உரிமைகள் வழக்கறிஞர்களைக் கொலைசெய்வதில் பங்குள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்தற்காக சரியானமுறையில் ஒருபோதுமே விசாரிக்கப்படாத ஒரு மனிதர் அவர் என்பது முற்றிலும் முரணானதாக உள்ளது” என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயல்த்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
“மனித உரிமைகள் பேரவைக்குவரும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் ஒரு கடந்தகால வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. ஜெனிவானில் ஒரு இராஜதந்திர நவடிக்கையை தலைமைதாங்குவதற்கு இதுபோன்ற மனிதரை வைத்திருப்பது முற்றிலும் பாதுகாப்பானதல்ல.” அண்மைய ஆண்டுகளில் சந்திரப்பிறேம ஒரு பத்திரிகை எழுத்தாளர் ஆனார். 2012 இல் அவர் ஜனாதிபதி கோத்தபாஜ ராஜபக்சவின் வாழ்க்கைவரலாற்றுப்புத்தகத்தை எழுதினார். இது ஐக்கிய நாடுகளின் தொடர் விசாரணைகளில் துல்லியமான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட 2009 இல் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினர் புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுக்கின்றது.
“தண்டிக்கப்படாத அரச குற்றம் என்பது கொண்டாடப்பட்ட இலங்கையின் ஜனநாயகத்தின் வெறுப்பூட்டும் அடித்தளமாக உள்ளது” என இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பினைச் சேர்ந்த பாசனா அபயவர்த்தன தெரிவித்தார். “ எவரும் எதிர்ப்புக் கூட தெரிவிக்காமல்இ ஐக்கிய நாடுகளிற்கான நாட்டின் பிரதிநிதியாக கொலைப்படையின் முன்னாள் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் முன்மொழியப்படக்கூடிய அளவிற்கு உண்மை புதைந்து கிடக்கின்றது.”
மேலதிக தகவல்களுக்கு சிஏ சநந்திரபிரேமா தொடர்பான ஆவணக் கோவைகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்:
‘எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்.கிழக்கின் பாதுகாப்பானது இந்த இணைப்பிலேதான் தங்கியுள்ளது.அது இணைக்கப்பட்டு எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கப்பெறும்வரை நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுப்போம்’என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சுரேஷ் தர்மலிங்கம் அவர்கள் இலக்குடனான நேர்காணலில் தெரிவித்தார்,
கட்சி தொடர்பான விடயங்கள் ,சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவர் செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை கொள்கைகளாக எவற்றினை நீங்கள் முன்னிறுத்துகின்றீர்கள்?
நாங்கள் ஒரு நாடு இரண்டு தேசம் என்ற அடிப்படையில் கொள்கையை முன்வைத்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஒரு நிலை நீடிக்கப்படவேண்டுமானால் தமிழ் மக்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும்.அத்துடன் இணைந்து அவர்களின் இறைமையும் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் நிம்மதியாக இலங்கைத்தீவில் சிங்கள மக்கள் போன்றும் முஸ்லிம் மக்கள் போன்றும் சமூகத்தில் வாழக்கூடிய சூழல் உருவாகும்.
அந்த வகையில் தமிழ் மக்களின் தீர்வாக எமது விடுதலைப் போராட்டத் தலைமையானது பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்த தேச அங்கீகாரம் என்ற விடயம் பிரதானமானது. அந்த அடிப்படையில் தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் எங்களுடைய கொள்கையாக கொண்டிருக்கின்றோம்.
பிள்ளையான்,கருணா போன்ற பல கட்சிகள் கிழக்கினை பிரித்தாளும் நோக்குடன் பல்வேறுவிதமான கருத்துகளை மக்கள் மத்தியில் முன்வைத்து வருகின்றனர்.
எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும். கிழக்கின் பாதுகாப்பானது இந்த இணைப்பிலேதான் தங்கியுள்ளது.அது இணைக்கப்பட்டு எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கப்பெறும்வரை நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் உங்கள் கட்சியின் வளர்ச்சிப்போக்கு எவ்வாறு உள்ளது?
எங்களது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தமட்டில் கடந்த பத்து வருடமாக கிழக்கு மாகாணத்தில் நாங்கள் தனியாக நின்று பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சவால்களுக்கு மத்தியில் பலரின் உதவியோடு கட்சியைக் கட்டியெழுப்பி வந்துள்ளளோம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு என்பது ஒரு வீச்சாக மாறியிருக்கின்றது. நாங்கள் கொள்கையில் உறுதியான ஒரு தரப்பு என்ற ஒரு எண்ணம் மக்களிடம் காணப்படுகிறது.
தற்போது நாங்கள் பலமாக இருக்கின்றோம். அரசியல் கட்சிகள்,பொதுஅமைப்புகள், புத்திஜீவிககள் மாணவர்ககள், சிவில் அமைப்புகள் என பல்வேறு அமைப்பினரும் எங்களை சந்தித்து பேசிவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறான பணிகளை நீங்கள் முன்னெடுத்துவருகின்றிர்கள்?
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மையமாக வைத்தே நாம் வேலைகளை செய்து வருகின்றேம். குறிப்பாக முன்னாள் போராளிகள்,விதவைகள்,போரில் பாதிக்கப்பட்ட நபர்களை இனங்கண்டு அவர்களுக்கான வசதிவாய்ப்புகளையும் வாழ்வாதாரத் திட்டங்களையும் நாங்கள் செய்துவருகின்றோம்.
திடீரென ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்கள் போன்ற தருணங்களில் புலம்பெயர் மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்று பெற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று கடந்த காலங்களில் உதவிகளை செய்திருக்கின்றோம்.
கல்வித்துறையை நாங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இனி எமது மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் கல்வியாகும். கல்வித் துறையை முன்னேற்றும் விதமாக மட்டக்களப்பு மாவட்டததில் கோப்பாவெளி, புல்லுமலை, வாகரை,வாகனேரி, கட்டுமுறிவு போன்ற பின்தங்கிய எல்லைக்கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி நிலையங்களை அமைத்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகின்றோம்.
எதிர்கால சந்ததியினர் நன்கு கற்று நல்வழிப்படவேண்டும் என்பது தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் எம்முடன் பேசுவார்கள்.அவ்வாறே அவர்களின் செயற்பாடும் அமைந்திருக்கின்றது.புலம்பெயர் தமிழ் மக்கள் எம் மூடாக பலவழிகளில் இங்கு உதவிவருவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பொதுவான விடயங்களில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலையிருக்கின்றதா?அவ்வாறு இல்லாதுவிட்டால் அதற்கான காரணம் என்ன?
நாங்கள் எமது கொள்கையில் உறுதியாகவுள்ள கட்சி.அந்த அடிப்படையிலேயே நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் பிரிந்துவந்தோம்.கிழக்கில் பல கட்சிகள் இருக்கின்றன.அவர்கள் தமிழ் மக்களின் நலன்கருதியோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கும் வகையிலேயோ அவர்களின் கொள்கைகள் இல்லை.
எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய,தமிழ் தேசம் அங்கீகரிக்கும் விதமாக செயற்படும் கட்சிகளுடனேயே நாங்கள் பயணிப்பது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிபோன்று கொள்கையுடன் பயணிக்கும் கட்சி கிழக்கில் இல்லையென்பதே உண்மை.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக,நீதிக்காக வேண்டி எந்த தரப்புக்கு வாக்களித்தார்களோ அந்தத்தரப்பு கடந்த பத்து வருடங்காக அவர்களை ஏமாற்றி வந்திருக்கிறது.
தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் தரப்புடன் இருக்கப் போகின்றீர்களா, தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் தொடர்ச்சியாக குரல்கொடுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற மக்கள் இயக்கங்களை ஆதரிக்கப்போகின்றீர்களா என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
தமிழ் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த இலட்சியத்தினை,அடையாமல், அதில் ஒரு துளி முன்னேற்றம் கூட அடையாமல் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அநாதையாக்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைக்காக ஏராளமான மாவீரர்களை இழந்திருக்கின்றோம்.இந்த விடுதலைப்போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இவ்வளவு இழப்புகளையும் கொண்ட இலட்சியத்தினை அடையவேண்டும் என்பதே எமது இலக்காகும்.அந்த வழியிலேயே எமது கொள்கையும் கூட அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசென்றதும் அதற்காக குரல்கொடுக்கும் ஒரேயொரு தலைவர் அது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமேயாகும்.வடகிழக்கு இணையவேண்டும் என்பதற்காக அன்று தொடக்கம் இன்றுவரை குரல்கொடுத்துவருபவரும் அவரே.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் சிங்களவர்கள் முஸ்லிம்களை பாவித்து தமிழர்களை முடக்குவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.நாங்கள் வடக்குடன் சேரும்போதுமட்டும் தான் தமிழர்கள் பெரும்பான்மை.எதிர்காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே ஏமாற்றமடையாமல் தமிழ் மக்களின் உரிமையினை வெல்லமுடியும்.
வவுனியா குடாகச்சக்கொடிய பகுதியில் இன்று வெடிக்கும் நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் குடாகச்சக்கொடிய எனும் கிராமத்தில் சஜித் பிரேமதாசவால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையிலையே இன்று அப்பகுதியில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
குடாகச்சக்கொடிய எனும் கிராமத்தில் புதிதாக வீடுகளை அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று காலை பதினொரு மணியளவில் அப்பகுதியை டோசர் மூலம் சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை வேலையாட்கள் கண்டுள்ளார்கள். அதனையடுத்து அப்பகுதி மக்களால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கிய தகவலையடுத்து, அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் , நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அக் கைக்குண்டு செயலிழக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பணம் புங்குடுதீவு கடற்பரப்பில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் இன்றைய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இவ்வாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, யாழ்ப்பாணம் சங்குபிட்டி பகுதியில் மேலும் இருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா சின்னத்தம்பனை கிராமத்தில் மாலை வேளைகளிலும் இரவு நேரங்களிலும் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இக் கிராம விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
இரவு நேரங்களில் எமது வயலுக்குள் வருகின்ற காட்டு யானைகள் மூன்று ஏக்கர் அறுபடை செய்யக்கூடிய நெல்லை முற்றுமுழுதாக அழித்து விடுகின்றது.
எம் பயிர்ச்செய்கை கடந்த காலங்களிலே ஏற்பட்ட கடும் வரட்சியினால் முற்றுமுழுதாக அழிவடைந்தது. பின்னர் கடும் மழை வெள்ளத்தினால் எம் விவசாய நிலங்கள் முற்றாக அழிவடைந்து இவ்வாறு தொடர் அழிவு ஏற்பட்டமையால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.
இந் நிலையில் நேற்று இரவு காட்டு யானைகளின் தாக்கத்தினால் சுமார் மூன்றரை இலட்சம் பெறுமதியான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
நாம் வங்கியில் கடன் எடுத்து விவசாயம் செய்தோம், மருந்து, உர மானியங்கள், உழவு இயந்திர செலவுகள் என எல்லாவற்றையும் கடனாகவே செய்தோம். அதனால் இந்த வெள்ளாண்மையை அறுபடை செய்தே விவசாயத்திற்காக பெற்ற கடனை மீண்டும் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆனால் காட்டு யானைகளின் தாக்கத்தினால் எம் பயிர்கள முற்றாக அழிவடைந்துவிட்டது. நாம் எவ்வாறு பெற்ற கடன்களை கொடுப்பது. இதற்கு சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானைகள் அருகில் பயன் தரும் தாவரங்களை அழித்துவிட்டது. அந்த அழிவிற்கே இதுவரை எமக்கு எவரும் ஒரு உதவிதிட்டங்களும் செய்யவில்லை.
இந்நிலையில் நாங்கள் இதற்கு பொறுப்பான அரசாங்க உயர் அதிகாரிகளிடம் கேட்கின்றோம் இனிவரும் காலங்களிலாவது எமது விவசாய நிலங்களையும், பயிர்களையும் பாதுகாப்பதற்க்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, எம் விவசாய காணிகளுக்கான யானை வேலியினை அமைத்தும், அழிவடைந்த பயிர்களுக்கான நஸ்ட ஈட்டினையும் உயர் அதிகாரிகளே பெற்றுத் தரவேண்டும் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை ஐக்கிய பொதுச் சந்தை வளாகத்தில் வாராந்த சந்தை நடைமுறை தொடக்கி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சந்தை வர்த்தகர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு முன்னால் மேற்கொண்டனர்.
வியாபாரம் சூடுபிடித்த நிலையில் வர்த்தகர்களும், சந்தைக்கு வந்த பொதுமக்களும் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மத்திய பொது சந்தை வர்த்தகர்களினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சந்தை நடவடிக்கையை நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் நகர சபை தலைவருக்கு கடிதமும் வழங்கப்பட்டது.
வாராந்த சந்தையில் மரக்கறி உற்பத்திக்கும், உள்ளூர் உற்பத்திக்கும், ஏனைய பொருட்களும் விற்பதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. மீன், இறைச்சி விற்பனை தடுக்கப்பட்டு இருந்தது.
வாராந்த சந்தையில் விற்பனை நடவடிக்கைக்காக 200/= அறவிடப்பட்டு இருந்தது. அப்பணம் வியாபாரிகளுக்கு மீள் வழங்கப்பட்டது.
இதனால் சந்தையில் வியாபாரங்கள் இடம்பெறவில்லை.சந்தையை சுற்றி கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. திருகோணமலை மின்சார நிலைய வீதியில் 1997ம் வருடம் மாசி மாதம் 27ம் திகதி நகர சபைத் தலைவர் பெ.சூரியமூர்த்தியினால் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது.
65 இலட்சம் மதிப்பீட்டில் வேலைகள் நிறைவடைந்த போதிலும் இங்கு அரசியல் காரணங்களால் வியாபார நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டு இருந்தது. பின்னர் இது இராணுவ முகமாக இயங்கி வந்தது.இராணுவம் அகன்று சென்ற பின்னர் வெறுமையாக இருந்த இவ்வளாகத்தில் வாராந்த சந்தையை அமைக்க சபை தீர்மானித்து முதல் வாராந்த சந்தை இன்று ஞாயிற்றுக்கிழமை 2020.02.02 தொடக்கி வைக்கப்பட்டது.
நாட்டின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாராந்த சந்தை நடைபெற்று வருகிறது. ஆனால் திருகோணமலை நகரில் இச்சந்தை நடத்தப்படுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இன்னொரு சந்தை நடைபெற்றால் இன முறுகல் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் பலவாறு எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து இடத்தை அடையாளப்படுத்தியுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பு போட்டுள்ளார்கள்.
இந்நிலையில், நேற்று (01), குறித்த பகுதியை உடனடியாக அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி எடுக்கப்பட்டு, இன்று (02), சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியை அகழ்ந்த போது, 81 மில்லிமீற்றர் எறிகணைகள் வைக்கும் 13 பெட்டிகள் மண்கள் போட்டு நிரப்பப்பட்ட நிலையில் நிலத்துக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
சிறப்பு அதிரடிப்படையினர், குறித்த பகுதியை துப்புரவு செய்து, அகழ்வு செய்த இடத்தை மூடிவிட்டு வெறும் பெட்டிகளையே எடுத்து சென்றுள்ளனர்.