Home Blog Page 2352

கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

இலங்கைத் தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல. வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும், செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர் கொள்ளாததுடன் அதனால் வரும் போசாக்கின்மையால் பாதிக்கப்படாதவர்களாகவும் இலங்கைத் தீவின் மக்கள் கடந்த கால வரலாற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

தசாப்தகால உள்நாட்டுப் போர் நடைபெற்ற உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்படாத மக்களைக் கொண்ட நாடாக இலங்கைத் தீவு தன்னை அடையாளப்படுத்தியது. இவ்வாறு கடந்த காலத்தில் அனர்த்தங்களின் போது பட்டினியையும் அதனால் வரும் போசாக்கின்மையையும் எதிர்கொள்ளாது இருந்தமைக்கு இலங்கைத்தீவில் வலுவாக இருந்த உள்ளூர்ப் பொருளாதார மூலங்களே அடிப்படையாக இருந்தது என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.

மதில் கட்டப்படாமல் மரங்கள், செடிகள், கொடிகளுடன் காணப்பட்ட வேலிகளும், மண்மூடி நிரப்பப்படாதிருந்த உள்ளூர்த் தோணாக்களும் அவற்றினை அண்டி வளர்ந்த தென்னை, பனை மரங்களும், சிறு சிறு தாழ்வான நிலப்பகுதிகளும், சதுர்ப்பு நிலங்களும் கண்டல் காடுகளும், சிறு சிறு பற்றைக் காடுகளும் பல்வேறு இலை குழைகளையும், நீர் வாழ் அங்கிகளையும் பல்கிப் பெருகச் செய்ததுடன், அனர்த்த காலங்களில் போசாக்கான உணவுத் தேவையினை ஈடு செய்யவும் வாய்ப்பினை வழங்கியிருந்தன. இவை உள்ளூர் மருத்துவத்திற்கான மூல வளங்களையும் வழங்கி வந்தன.

பெரும்பாலும் இயந்திரமயப்படுத்தப்படாது உள்ளூர் மனித வளத்தைப் பிரதானமாகக் கொண்டு இயக்கம் பெற்று வந்த வேளாண்மைச் செய்கையானது, அவ்வுற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரதும் வீடுகளில் நெல்லரிசியின் சேமிப்பினை உறுதிப்படுத்தியது. இதனால் எப்பேர்ப்பட்ட அனர்த்தங்களின் போதும் பட்டினியை எதிர்கொள்ளாது நமது நாட்டின் மக்கள் வாழ முடிந்தது.

தேங்காய்ச் சம்பலோடோ அல்லது கீரைச் சுண்டலோடோ மூன்று வேளையும் சாப்பிடும் நிலைமையினை இந்த உள்ளூர் வளங்கள் வலுவாக்கியிருந்தன. nel கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

இன்று கொரோனா வைரசின் தாக்கம் நம்மை வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. முடங்கிய சில தினங்களிலேயே உணவு இருப்பு பற்றிய பிரக்ஞை எம்மை பீதி கொள்ளச் செய்யத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாம் எமது உள்ளூர்ப் பொருளாதார வளங்கள் பற்றியும் அவற்றினை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான கூட்டுறவு வாழ்வியல் முறைமைகள் குறித்தும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. அதாவது ஊரில் கிடைக்கும் வளங்களைப் பகிர்ந்துண்ட பாதீட்டுப் பண்பாடு பற்றியும் அவற்றின் மீளுருவாக்கம் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.

அதேவேளை நவீன நகரமயமாக்கமும் அதனோடிணைந்த நுகர்வுப் பொருளாதாரமும் அனர்த்த காலங்களில் எந்தளவு சாதகமானது என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டிய தேவைகளையும் எழுப்பியுள்ளது. இத்துடன் நகரமயமாக்கலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் செயற்பாடுகள் எந்தளவு நிலைபேறான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக் கூடியது என்ற கேள்விகளையும் கேட்க வேண்டியுள்ளது.

காலனித்துவ ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட நவீனமயமாக்கத்தின் காரணமாக மெல்ல மெல்ல வளங்களைப் பகிர்ந்துண்டு வாழ்ந்து வந்த நமது உள்ளூர்ப் பொருளாதார வாழ்வியல் முறைமைகளும் அவற்றின் பொறிமுறைமைகளும் வலுக்குன்றச் செய்யப்பட்டு நிரந்தரச் சந்தையான நகரங்கள் உருவாக்கப்பட்டன. இந்நகரங்களை பிரதானப்படுத்திய நுகர்வுப் பண்பாடு வளர்த்தெடுக்கப்பட்டது.

துரித நகரமயமாக்கல் காரணமாக உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஆதாரங்களாக விளங்கிய சிறு காடுகள், சிறிய சதுப்பு நிலங்கள், சிறு சிறு குளங்கள் என்பன கவனத்திற்கொள்ளப்படாமல் இல்லாமலாக்கப்பட்டன. இதனால் உள்ளூர் கிணறுகளில் இயற்கையாக வடிகட்டப்பட்டு வரும் நீர்வளம் குறைவடைந்தது. காலப்போக்கில் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைமை உருவாக்கப்பட்டது.

நமக்கான குடிநீரும் எரிவாயுவைப் போல வெளியிலிருந்தே வரும் நிலைமை வளர்ந்துள்ளது. அனர்த்த காலங்களில் போக்குவரத்தும், நகரங்களும் முடக்கப்படும் போது அடிப்படைத் தேவையான குடிநீரும் முடங்கி விடும் நிலைமை வலுவாகியுள்ளது.

இச்சூழலில் நமது வளவுகளில் வற்றாத கிணறுகளை வைத்திருப்பதற்கான நிலவியல் பண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதாவது சிறு மடுக்களாகவும், குளங்களாகவும், குட்டைகளாகவும், பள்ளங்களாகவும், சதுப்பு நிலங்களாகவும் ஊர்கள் எங்கும் இயற்கை தந்துள்ள நிலவியலைப் பாதுகாத்து புதிய குடியிருப்புக்களை அமைப்பதில் நாம் கவனஞ் செலுத்த வேண்டும்.

இத்தோடு நமது குடியிருப்புக்களில் முருங்கையும், தூதுவளையும், முடக்கொத்தானும், இலட்சகட்டையும், முல்லையும், முசுட்டையும், மான்பாய்ஞ்சானும், குறிஞ்சாவும், அவரையும், பாகலும், நாடையும், பீர்க்கும், புடோலும் என நமது அன்றாட உணவுத் தேவையில் முக்கிய பங்கு வகித்த செடிகளும் கொடிகளும் செழித்து வளர்ந்த வேலிப்பண்பாடு இல்லாமலாகியது.3d9c1131 f275507f கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

இன்று அனர்த்த காலத்தில் ஊரடங்கு வேளையில் வீடுகளுக்குள் முடங்கியிருந்து நோய் எதிர்ப்புச் சக்திகளை வழங்கவல்ல உள்ளூர் உணவுகளை உண்ண வேண்டிய தேவை உணரப்படும் காலத்தில் நமது வேலிப் பண்பாட்டினை ஞாபகத்தில் கொண்டு வருகின்றோம்.

கடந்து போன போர்க் காலங்களில் நாம் வீடுகளில் முடங்கி வாழ்ந்த நாட்களில் போசாக்கான உணவுகளைப் பெற அன்றிருந்த வேலிப்பண்பாடு நன்கு உதவியிருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் துரிதமடைந்த நகரமயமாக்கம் நமது வேலிப்பண்பாட்டையும் அதன் பயன்பாடுகளையும் கவனத்திற் கொள்ளாமல் கட்டிட நிருமாணத்தை வளர்த்தெடுத்தது.

பெருவெள்ளம் வரும் போதும் தொற்று நோய்கள் பரவும் போதும் நாம் நமது வேலிப்பண்பாட்டை மீள ஞாபகப்படுத்துகின்றோம். இது இனிவருங் காலத்தில் கடந்து சென்ற பண்பாடாகவன்றி நகரமயமாக்கத்தில் பசுமை வேலிப்பயன்பாடு எனும் திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.

நமது உள்ளூராட்சி சபைகள் கிராம, நகர திட்டமிடல்களின் போது பசுமை வேலிப்பண்பாட்டையும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.

கொரோனா அனர்த்தம், உல்லாசப் பயணத்தைப் பிரதானப்படுத்தி உள்ளூர் வளங்களைக் கையாண்ட முறைமையில் மாற்றங்கள் தேவை என்பதை இடித்துரைத்து நிற்கின்றது. நமது உள்ளூர் வாவிகளை உல்லாசப் பயணிகளுக்கான அம்சமாக கருதி நடவடிக்கைகளை மேற்கொண்ட போது உள்ளூர் மீனவர்கள் தெரிவித்த கருத்துக்களைச் செவிமடுக்காமல் இருந்ததன் பிரதிகூலம் தற்போது வெளித் தெரிகின்றது.

அதாவது. “சீ பிளேன் அதிக சத்தத்துடனும் அதிக விசையுடனும் ஆத்துக்குள்ள அதுவும் மீன் பெருகும் கல்லுகள் உள்ள பகுதியில் வருவதால் மீன் பெருகுவது குறைகிறது என்று உள்ளூர் மீனவர்கள் ஆதங்கப்பட்ட போது டொலரும் யூரோவும் வருகிறது இதுதான் பொருளியல் மாற்றம் பொருளாதார வளர்ச்சி என்று நியாயம் கூறினோம். ஆனால் இன்று சீ பிளேனும் வரவில்லை டொலருமில்லை, யூரோவுமில்லை ஆத்துல மீனும் குறைஞ்சித்து. ஊராக்களுக்குச் சாப்பாடுமில்லாத நிலைமை வந்துள்ளது” இந்த அனுபவங்களை கருத்திற் கொண்டு நமது கடந்தகால உல்லாசப் பயணத் தொழிற்துறையினை மையப்படுத்திய அபிவிருத்திச் செயற்பாடுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையினை கொரோனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.sea கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

பணத்தை அல்லது மூலதனத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல் எனும் பொருளாதார கருத்தியல் ஆதிக்கம் பெற்று கிருமிநாசினிப் பாவனைகளையும், இயந்திரமயமாக்கலையும், பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த விவசாய உற்பத்தி முறைமைகள் குறித்தும் பொருத்தமற்ற மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி நீர்வாழ் அங்கிகளின் இருப்பினை அச்சுறுத்தி வரும் நவீன தொழில் நுட்பப் பிரயோகங்கள் குறித்தும் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவையை கொரோனா அனர்த்தம் உருவாக்கியுள்ளது.

அதாவது நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல நமது வேளாண்மை உற்பத்திச் செயற்பாட்டில் மனித வளத்தை பிரதானமாகக் கொண்டமைந்த உற்பத்தி முறைமை இருந்த போது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட மனிதர்களின் வீடுகளில் உணவுக்குத் தேவையான நெல்லரிசியினைச் சேமிக்கும் பண்பாடு வலுவாக இருந்தது.

புல்லுப் பிடுங்குதல், வேளாமை வெட்டுதல், சூடுமிதித்தல், கதிர் பொறுக்குதல் என நமது சமூகத்தின் மனிதர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்கான உணவுச் சேமிப்பு பொறி முறைமை பேணப்பட்டு வந்தது. பொருளாதாரத் தடையுடன் போர் நடந்த போதும் நமது சமூகத்தினர் பட்டினி என மடிந்து போகாமலும் யாரிடமும் அன்றாட உணவுக்காகக் கையேந்தாமலும் வாழ்வதற்கான உணவு இருப்பினை நமது வேளாண்மை உற்பத்தி முறைமை வலுப்படுத்தி வந்தது.

ஆனால் பின்னர் வந்த இயந்திரமயமாக்கல் நமது வேளாண்மை உற்பத்திப் பொருளாதாரத்தின் சமூக பண்பாட்டு அம்சங்களைக் கவனத்திற் கொள்ளாமல் பணமீட்டல், இலாபப் பெருக்கம் எனும் நவீன பொருளியல் சமன்பாட்டை மாத்திரம் கவனத்திற் கொண்டு அதற்குச் சாதகமான கதைகளுடன் வளர்த்தெடுக்கப்பட்டதால், இன்று ஓர் அனர்த்த காலத்தில் விவசாய சமூகங்களே ஒருநாள் உணவுக்காக அவஸ்தைப்படும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.

கொரோனாவால் உலகமே முடங்கியுள்ள காலத்தில் நமது வேளாண்மை உற்பத்தி முறைமையில் மனிதப் பங்குபற்றுதலால் ஏற்பட்டு வந்த சாதகங்கள் பற்றிய கவனிப்புத் தெரிய வருகின்றது. எனவே நவீன தொழில் நுட்பங்களை பிரயோகத்திற்குக் கொண்டு வரும் போது நமது பண்பாட்டின் நிலைமைகளுக்கேற்ப ஆராய்ந்து திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை கொரோனா நமக்குக் கற்றுத் தந்துள்ளது.

கொரோனா நமது வைத்தியத் துறையில் நாம் உள்ளூர் வைத்திய முறைமைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலுவாக உணர்த்தி நிற்கின்றது. இன்று கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களை மட்டுமே கவனிக்க முடியாதளவிற்கு சில மேற்குலக நாடுகள் தமது மருத்துவத் துறையின் சகல சக்தியையும் ஒன்று திரட்டியும் முடியாதவாறு திண்டாடும் அனுபவங்களின் பின்புலத்தில் நம்மிடையே பெரும்பாலும் துறைசார் நபர்களின் தன்னார்வம் ஒன்றையே மையமாகக் கொண்டு உயிர்ப்புடன் இருந் துவரும் விசக்கடி வைத்தியம், முறிவு வைத்தியம், மருத்துவிச்சிப் பாரம்பரியம், கட்டு வைத்தியம் முதலிய வைத்திய முறைகளை நாம் மதித்து அவற்றின் பெறுமதிகளை உணர்ந்து அவற்றை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.4 கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

தொற்று நோய் அனர்த்தம் ஒன்று வரும் போது அந்நோயை பிரதானப்படுத்தி மருத்துவத் துறை இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும் போது ஏனைய நோயாளர்களைக் கவனிக்கவே முடியாத பரிதாபம் உருவாகும் போது நமது பாரம்பரியமான உள்ளூர் மருத்துவர்களும் அந்த மருத்துவ முறைகளும் அந்த ஆபத்தான இடைவெளியை ஈடு செய்யும் வல்லமை உள்ளவர்களாக இயல்பாகவே இயங்குவார்கள் என்பதை நாம் தற்போது உணர முடிகின்றது.

எனவே முடிவாக இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரசின் தாக்கங்களும் அது தரும் படிப்பினைகளும் நீண்ட பாரம்பரியங்களைக் கொண்ட மனித சமூகம் என்ற வகையில் நாம் எமது கடந்த கால வாழ்வியல் முறைமைகள் குறித்தும், அவை பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டும் முன்செல்வதற்கான வெளிகளைத் திறந்துள்ளது எனலாம்.

குறிப்பாக காலனித்துவமும் நவீனமயமாக்கமும் மூடநம்பிக்கைகள், காலத்திற்கு ஒவ்வாதவை எனத் தட்டிக்கழித்த நமது உள்ளூர் பொருளியல் பண்பாடுகள் குறித்தும், நமது உள்ளூர் அறிவு முறைமைகள் பற்றியும் கவனத்திற் கொண்டு நமது எதிர்கால வாழ்வியல் முறைமைகளை வடிவமைப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன எனலாம்.

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைசெய்த சீல் வைக்கப்பட்ட தனியார் விடுதி!

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இன்றைய தினம்குறித்த விடுதி இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த தனியார் விடுதியில் இருந்த மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த தனியார் விடுதியின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொடர்பில் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன்.

இன்று நாட்டிற்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ள கொரோனா எனப்படும் cove 19 வைரஸ் பற்றிய பல செய்திகள் சமூக வலை தளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன .

கொரோனா என்பது ஒரு முடிவில்லாத தொடக்கமோ என்று எண்ணும் அளவுக்கு நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து செல்கின்றது .இது தொடர்பான பல வகையான விழிப்புணர்வுகளும் ஆராட்சி கட்டுரைகளும் வெளியிடபட்டு கொண்டிருந்தாலும் இன்னும் இந்த வைரஸ் இன் பூரண தன்மையையும் , தாக்கும் வீரியத்தையும் ,கட்டுப்படுத்தும் மருந்துகள் என்பன பற்றி ஒரு தெளிவான முடிவு இல்லை என்பதே உண்மை .

சுகாதார பிரிவினர் கூறுவது போல Stay at Home என்பது ஒன்றே கொரோனா தொற்றை , பரவலை தடுக்கும் ஏற்று கொள்ள கூடிய ஒரு முறையாக இருக்கின்றது .
இன்று லாக் டவுன் மூலம் மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளின் தேவைகளும் சீர் குலைந்து உள்ளது .

இதில் முக்கியமான ஒன்றுதான் வைத்திய தேவை .இன்று பெரும்பாலான தொற்றா நோய்களான நீரழிவு , குருதி அமுக்கம் ,சிறுநீரக நோய்கள் என்பன கொரோனா எனும் கொடிய நோயினால் மறைக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் முக்கியத்துவம் இழந்து வருகின்றது என்றால் மிகையாகாது .எமது நாட்டு மக்களை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று தான் சிறுநீரக நோய்கள் .

இந்த நோய் தந்த அல்லது தந்து கொண்டிருக்கும் அழிவுகளை நாம் இலகுவில் மறந்து விட முடியாது .
இந்த நோய்க்கான பல்வேறு திட்ட்ங்கள் நடைமுறையில் இருந்த போதும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் பெரும்பாலானவை இஸ்தம்பித்து உள்ளது .சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் அல்லர் இரத்த சுத்திகரிப்பு முறைகள் ( Dialysis )தொடர்ச்சியாக நீண்டகாலம் தடை இன்றி பின்பற்ற வேண்டும் .

சீரான முறையில் மருந்துகள் உட்க்கொள்ளாத பட்சத்தில் சிறுநீரகங்கள் விரைவில் தொழிட்பாட்டை இழந்து மீள தொழிற்பட முடியாத நிலையை அடைந்து விடுகின்றன .இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மிக குறைந்த மனித வளத்திலும் அரச வைத்தியசாலைகள் தமது அன்றாட கிளினிக் வசதிகளை வழங்கிவருகின்றது .
எனவே சிறுநீரக நோயாளர்கள் தங்களது பிரேதச வைத்திய வைத்தியசாலைகளை அணுகி தங்களது மருந்துகளை தொடர்ச்சியாக பெறுவதுடன் இரதமாற்று முறைகளையும் பின்பற்றுவது அவசியம் ஆகின்றது .

உங்கள் கிளினிக் புத்தகத்தை , வைத்திய சான்றிதழ்களை காண்பிப்பதன் மூலம் ஊரடங்கு வேளையிலும் இந்த சேவைகளை பெற்று கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
கொரோன வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாக தாக்கும் என்பதும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடன குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்பதும். குறிப்பிடத்தக்கது .

எனவே தொடர்ச்சியாக சிறுநீரக நோய்க்கான மருந்துகளை
பாவிப்பதன் மூலம் உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் .

மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்வு;குறைவான மக்கள் நடமாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 16 மாவட்டங்களில் பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 6.00மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொருள்கொள்வனவில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்றைய தினம் குறைந்தளவு மக்களே வர்த்தக நிலையங்களுக்கு வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்தது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள்ääமருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்ததை காணமுடிந்தது.IMG 3711 மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்வு;குறைவான மக்கள் நடமாட்டம்

மட்டக்களப்பு பொதுச்சந்தையில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் சந்தையின் பகுதிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம்,மட்டக்களப்பு சின்ன ஊறனி சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு மைதானம்,மட்டக்களப்பு உப்புக்கராச்சி பூங்கா,சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானங்களில் பிரித்து சந்தைகள் நடாத்தப்பட்டன.

இதன் காரணமாக மக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட்டதுடன் மக்கள் குறைந்தளவிலேயே இப்பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு சென்று பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

வர்த்தக நிலையங்களில் மக்கள் சமூக இடைவெளிகளை பேணியவாறு பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.

இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பில் மக்களுக்கான பொருட்கள் விற்பனைசெய்யப்பட்ட சதோச நிலையம் திறக்கப்படாமை குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.IMG 3792 மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்வு;குறைவான மக்கள் நடமாட்டம்

இந்த சதோச நிலையம் ஊடாக பொதுமக்கள் குறைந்த விலைகளில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவந்த நிலையில் இன்றைய தினம் குறித்த சதோச நிலையம் திறக்கப்படாமை குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.

4,000 அதிகமானோர் பலி – துன்பமான வாரங்களை எதிர்கொள்ளும் அமெரிக்கா

கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை வரையிலும் 4000 இற்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், 200,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுடன் (31) முடிவுற்ற 24 மணிநேரத்தில் அங்கு 700 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொலாட் டிறம் அமெரிக்க மக்களுக்கு எதிர்வரும் வாரங்கள் மிகவும் துன்பமானவையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 200,000 மக்கள் மரணமடையலாம் என அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

உலகில் 42,000 மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 850,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச்சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண மக்களுக்கான அறிவித்தல்

வடக்கு மாகாண மக்களுக்கு சுகாதாரத் துறையினரால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “இதுவரை வடக்கு மாகாணத்தில் ஒரு கொரோனா நோயாளி மட்டுமே இனங்காணப்பட்டுள்ளார். ஆனாலும் இந்நோய் எமது மாகாணத்தில் பரவாமல் இருப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நோய் பரவாமல் தடுப்பதற்கும், நோய் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கும் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்ற ஆயத்தமாக இருக்கின்றனர். தயவு செய்து நீங்கள் உங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து இந்நோய் வராது ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு 021 222 6666 மற்றும் 021 221 7982 ஆகிய தொலைபேசி இலக்கங்களை அறித்துள்ளது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம். இந்த இலக்கங்கள் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கிளினிக் செல்பவராயின் உங்களுக்குத் தேவையான மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் கிளினிக் செல்லும் வைத்தியசாலைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் விபரத்தை தெரிவிப்பதன் மூலம் இந்த சேவையை பெறலாம். அல்லது மேற்குறிப்பிட்டள்ள அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.

உங்கள் பிரதேசங்களில் உள்ள மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்தை அறிய வேண்டுமாயின் மேலே குறிப்பிட்ட அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு இந்த சேவையை பெறமுடியும். இந்த சேவையை வழங்குவதற்கு தனியார் மருந்தகங்கள் தங்கள் மருந்துக்கான விலையுடன் கிலோ மீற்றருக்கு ஐம்பது ரூபாய் அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இந்த சேவையை இலவசமாக வழங்க சில தனியார் மருந்தகங்கள் முடிவு செய்துள்ளன. இதுவரை பதிவு செய்யப்படாத மருந்தகங்களும் இந்த சேவையை மேற்கொள்ள முன்வந்தால், தங்களுக்கான அனுமதி சுகாதார அமைச்சில் இருந்து பெற்றுத்தர நேடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களும் தங்கள் விபரங்களை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் 2 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவையும் கடந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

வங்கிக்கு நேரடியாக வைப்பிலிடப்பட்ட 9.5 மில்லியன் ரூபா மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபா அன்பளிப்பு என்பவற்றுடன் இன்று முற்பகல் 8.00 மணிக்கு 145 மில்லியன் ரூபா நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருந்தது.

மக்கள் வங்கியின் நிதி முகாமைத்துவ கணக்குகள் திணைக்களம் 9.5 மில்லியன் ரூபா, மக்கள் வங்கி ஓய்வூதிய சங்கம் 03 மில்லியன் ரூபா, பீபல்ஸ் லீசிங், லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வங்கி என்பனவற்றின் தலா 5 மில்லியன் ரூபா, தேசிய சேமிப்பு வங்கி 8 மில்லியன் ரூபா மற்றும் அக்பர் பிரதர்ஸ் பிரைவற் லிமிடட் நிறுவனம் அன்பளிப்பு செய்த 50 மில்லியன் ரூபாவுடன் வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354354 என்ற இலக்கத்தின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) திரு. கே.பீ எகொடவெலேவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கில் 300 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் எதிர்வரும் ஆறாம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கமைய யாழ்மாவட்டத்திலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகல் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதற்கமைய யாழ் அரியாலையில் இடம்பெற்ற சிவஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் உட்பட யாழ் மாவட்டத்தில் 319 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே போன்று கிளிநொச்சி மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் இதுவரை கொரோனோ தொற்று இணங்காணப்படவில்லை.

ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஆகவே அந்தக் காலத்திற்குள் அவர்களுக்கு தொற்று ஏதும் காணப்படாதவிடத்து எதிர்வரும் 6 ஆம் திகதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றார்.