Home Blog Page 1310

தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் -சபா குகதாஸ்

தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த போர்க்குற்றங்கள் மனிதப்படுகொலைகள் இனப்படுகொலைகள் போன்றவற்றுக்கான பரிகார நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமை இந்திய மத்திய அரசிடமே உள்ளது. காரணம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் இன்றைய இலங்கைப் பிரதமர் மகிந்த ராஐபக்ச அன்றைய ஐனாதிபதியாக இருந்தார். அவர் அன்று இந்திய அரசிடம் கூறிய விடையம் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு எங்களுக்கு உதவி புரியுங்கள் நான் அவர்களை அழித்த பின்னர் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவேன். இதனை மகிந்த கூறி 12 ஆண்டுகள் கடந்து விட்டது. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

 இந்தியா உதவி செய்தமைக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பாக  மகிந்த ,கோட்டாபய போன்றோர் பாராட்டுக்களையும் நன்றியையும் பல தடவைகள் தெரிவித்து விட்டனர். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு தீர்வுக்கான எந்த முயற்சிகளும் இன்றி மேலும் அடக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குதல்களுக்கும் உள்ளாகி பரிகார நீதியும் காலம் தாழ்த்தப்பட்டு நீர்த்துச் செல்கின்றது.

பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு தொடர்ச்சியாக இந்தியா தங்களை காப்பாற்றும் தங்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கும் போது ஐ நா மனித உரிமைப் பேரவையில் 46/1 தீர்மானத்தில் நடுநிலை வகித்தமையை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழர்களுக்கு இந்தியா மீது அதிர்ச்சி ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் இல்லாத வகையில் இம்முறை வந்த மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் இந்தியாவால் இலங்கை அரசியலமைப்பில்  1987 கொண்டுவரப்பட்ட 13 திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுழ்ப்படுத்தவும், மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும், மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் உள்ளிட்ட விடையங்கள் கொண்டுவரப்பட்டன. இதே விடையத்தை பாரதப் பிரதமர் நரேந்திரமோதி இலங்கை அரச பிரதிநிதிகளை சந்திக்கும் போது அண்மைக்காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் ஐ நா தீர்மானத்தில் இந்தியா வலியுறுத்தும் விடையம்  தீர்மானமாக இருந்தும் அதனை ஆதரிக்காது நடுநிலை வகித்தமை தான். இதுவே ஈழத் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் அதனை இந்தியா பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அரசு போன்று வேறு தரப்புக்களை நாடாது பாரத தேசத்தையே நம்பினார்கள் தமிழ்த் தலைமைகளும் பாரிய நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தார்கள் ஆனால் ஐெனிவாவில் இந்தியாவின் முடிவுகள் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பிற்கு என்றுமே புவியியல் ரீதியாக முக்கியமானவை அவற்றை வேறு சக்திகள் காலணித்துவத்திற்கு உட்படுத்தாமல் ஈழத் தமிழர்களின் ஆளுகையில் இருப்பதை உறுதி செய்வது இந்தியாவின் இராஐதந்திரப் பொறுப்பு.

மறுக்கப்பட்ட உரிமைக்காக போராடிய  ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை பெற்றுக் கொடுப்பதுடன் நிலையான தீர்வினையும் சமாதானத்தினையும் காலம் தாழ்த்தாது இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான மத்தியஸ்தத்துடன் இந்திய மத்திய அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனையே ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

யாழ். புத்துாரில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வு நடவடிக்கை – மக்கள் எதிர்ப்பு

யாழ் வலி கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகளை தொடங்கியிருப்பதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் அகழ்வாரய்ச்சி பணி இடம்பெறும் போது தெரிவிக்கப்பட்டதை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

பிழம்பு's Content - Page 13 - கருத்துக்களம்

இந்நிலையில் இன்று மீண்டும் குறித்த பகுதிக்கு வந்த தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்த நிலையில் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர், பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து தொல்லியல் திணைக்களத்தினர் தவிசாளருக்கு எதிராக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் தவிசாளரை விசாரணைக்கு வருமாறு  காவல்துறையினர்அழைத்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில்  குழப்பமான நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணைகளில் இருந்து படையினரை பாதுகாக்க அரசு முயற்சி

சர்வதேச விசாரணைகளில் இருந்து படையினரை பாதுகாக்க அரசு முயற்சி செய்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த கல்வியமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமரட்ண, படையினருக்கு சர்வதேச விடுபாட்டுரிமையை வழங்கும் சட்டங்களின் மூலம் இதனை செயல்படுத்த உள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வெளியேஉள்ள அமைப்புகள் படையினரை விசாரணைக்கு உட்படுத்துவதை அனுமதிக்காத விதத்தில்சட்டங்கள்உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டங்கள் படையினரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாப்பதற்கான வலுவை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் அமெரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்தத் தயாராகும் ஜேர்மனி – இந் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜேர்மனியில் தஞ்சம் கோரியிருந்த 100க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளைக் அவசர அவசரமாக கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தும் முயற்சியில் ஜேர்மன் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இந் நிலையில், ஜேர்மன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த நடவடிக்கையை உடன் நிறுத்த வலியுறுத்தியும் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அமைப்புகளும் ஜேர்மன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எழுத்து வடிவிலோ அல்லது காணொளி வடிவிலோ தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.

 குறித்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முழு வடிவம்,

“கடந்த சில நாட்களாக ஜேர்மனியில் வசித்து வருகின்ற ஈழத்தமிழர்களில் சிலரை விடியற்காலையில் மேற்கொள்ளப்படும் திடீர்ச் செயற்பாட்டில் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவருகிறார்கள். கைது செய்யப்படுபவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது தொடர்பாக அவர்களது உறவினர்கள் எந்தவிதமான தகவலையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது அனைத்துத் தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வருடத்துக்கான விசாவைத் தருகிறோம் என்று சொல்லப்பட்ட செய்தியை நம்பி வெளிநாட்டவர்களின் காவல்துறைக்குச் சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் 30ம் திகதி ஒரு விசேட விமானத்தில் இவர்கள் எல்லோரும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 31பேர் டுசல்டோபிலும் அண்ணளவாக 50 பேர் பிராங்பேட்டிலும் 11 பேர் ஸ்ருட்காட்டிலும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. பங்குனி மாதம் 30ம் திகதிக்கு முன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவிதமான தொடர்பையும் ஏற்படுத்த முடியாமல் இருக்கிற படியால் இந்த எண்ணிக்கையை எம்மால் உறுதிப்படுத்த முடியாதிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் சிறீலங்காவில் மோசமாகிக் கொண்டிருக்கும் மனித உரிமை நிலைமைகளை விசாரிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும்எ ன்ற தீர்மானத்துக்கு வாக்களித்திருப்பதை அவதானிக்கும் போது, ஜேர்மானிய அரசு ஏன் இவ்வளவு இரகசியமாக இந்த நாடுகடத்தலை செய்ய முனைகிறது என்பது புலனாகிறது. ஜேர்மானிய அரசின் இந்த வெளிவேடத்தன்மை அதிர்ச்சி அளிக்கிறது.

ஜேர்மானிய அரசுக்குரிய மனித உரிமைக்கொள்கை மற்றும் மனிதநேய உதவி என்பவற்றுக்குப் பொறுப்பான ஆணையரான பாபேல் கொவ்ளர் ஜனவரி 28ம் திகதி பின்வருமாறு ட்வீற்றரில்  செய்தி வெளியிட்டிருந்தார். “ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை அவதானிக்கும் போது சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமாக இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. இந்த மனித உரிமைகள் ஆணையத்தினூடாக சிறீலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதில் ஜேர்மனி அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்திருந்தார்.

பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஜேர்மனி ஆதரவு வழங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் அங்கு மேற்கொள்ளப்படும் பன்னாட்டு மனிதாயச் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்களையும் சான்றுகளையும் சேகரித்து, அவற்றை உறுதிப்படுத்தி ஆய்வுசெய்தற்காக 2021, 2022ம் ஆண்டுகளில் மனித உரிமை ஆணையாளரின் பணிமனைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பன்னாட்டு நீதிமன்றம், மற்றும் குறிப்பிட்ட நாட்டுக்கு வெளியே மேற்கொள்ளப்படக்கூடிய வழக்குகள் தொடர்பான செயன்முறைகளை ஒருங்கிணைப்பதற்கும் மீளாய்வு செய்வதற்கும் அதே வேளை குறிப்பிட்ட தகவல்களை நாட்டின் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும் பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதிவழங்கலில் அனுபவம்மிக்க ஒரு மூத்த சட்ட ஆலோசகரும் நியமிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மற்றைய சட்ட ஆலோசகர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை உத்தியோகத்தர்கள், சட்டம் தொடர்பான மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்கும் வேண்டிய நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இத் தேவைகளுக்கென மொத்தமாக 2,856300 அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டிருக்கின்றன. சிறீலங்காவில் நிலவும் மோசமான மற்றும் தொடர்ந்து அதிகரித்துச் சொல்லும் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கென விசாரணையாளர்கள் கொண்ட ஒரு குழு நிறுவப்படவேண்டும் என வாதிடுகின்ற ஜேர்மனி, சமகாலத்தில் ஈழத்தமிழ் அகதிகள் 100 பேரை சிறிலங்காவுக்கு நாடுகடத்துகிறது.

அமெரிக்காவின் சேலம் நகரில் மந்திரக்காரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் போன்ற விசேட விசாரணைச் செயன்முறையா இது? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 2009ம் ஆண்டில் கோட்டாபயவும் மகிந்த இராஜபக்சவும் தமது நாட்டு மக்களை நடத்தியது போல சிறிலங்காவில் மிக மோசமாகப் பார்க்கப்படும் தமிழ் அகதிகளும் நடத்தப்படுவார்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவா இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது?

மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள் அல்லது பண்பாட்டு அமைப்புகள் இது தொடர்பான ஒரு காணொளியையோ அல்லது எழுத்து மூலமான ஒரு அறிக்கையையோ எமக்கு மிக அவசரமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதோடு வெளிநாட்டு அமைச்சருக்கும் உள்நாட்டு அமைச்சருக்கும் அனுப்பப்படும். மிகவும் கொடுமையான இந்த செயலை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களில் யாராவது கைதுசெய்யப்பட்டிருந்தால் அல்லது காணாமற்போயிருந்தால் உடனடியாக எம்முடன் தொடர்புகொள்ளுமாறு ஜேர்மனிய தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்” .

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, பிரேமன்
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்: email@humanrights.de

பெதுச்சபையில் நிதி ஒதுக்கீட்டை முறியடிக்க சிறீலங்கா திட்டம்?

இந்த வாரம் ஜெனீவாவில் சிறீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம் ஐ.நாவின் 76 ஆவது பொதுச்சபையில் இடம்பெறும் போது அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் சிறீலங்கா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவின் நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் சாட்சியங்களை சேகரித்து பாதுகாப்பதற்கு என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு 2.8 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை கோரவுள்ளது.

இந்த விவகாரத்தை எவ்வாறு தொழில்நுட்ப ரீதியாக அணுகுவது என்பது குறித்து சிறீலங்கா அரசு சிந்தித்து வருகின்றது.

ஐ.நா பெருமளவு நிதியை கோரவுள்ளதானது அது நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதை காட்டுவதாக ஐ.நாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி கலீல் ஹசீமி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சேகரிக்கப்படும் ஆதாரங்களில் செய்மதி புகைப்படங்களின் ஆதாரங்களையும் ஆய்வு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் மக்கள் மற்றும் அமைப்புக்கள் தம்மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை உரிய முறைப்படி ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அல்லது அது சார்ந்த மனித உரிமை அமைப்புக்களின் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம். சத்தியாக்கிர போராட்டம் ஆரம்பம்

வவுனியாக்குளம் சுற்றுலாமையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
IMG 0566 வலிந்து காணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம். சத்தியாக்கிர போராட்டம் ஆரம்பம்
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,
வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
IMG20210326091620 01 வலிந்து காணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம். சத்தியாக்கிர போராட்டம் ஆரம்பம்
தற்போது சிறியஅளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபாரநோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலாமையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.
IMG20210326090236 01 வலிந்து காணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம். சத்தியாக்கிர போராட்டம் ஆரம்பம்
இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழையநிலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்கு பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருக்கிறோம். எனவே வவுனியாக்குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.
IMG20210326090149 01 வலிந்து காணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம். சத்தியாக்கிர போராட்டம் ஆரம்பம்
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குளங்களை சாக்கடை ஆக்குவதா அபிவிருத்தி, அடுத்த தலைமுறைகளை குடிநீருக்கு கையேந்தவிடாதே, குளம்காப்போம், குலம்காப்போம், வலிந்துகாணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம், குளமா?குதூகலமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் மாவட்டத்தினை சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்தரப்புகள், குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டம் இன்று மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கடந்த 7 நாட்களில் மட்டும் 33 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

கடந்த 7 நாட்களில் மட்டும் 33 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று  உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகின்றது.

உலக அளவில் இதுவரை 12 கோடியே 49 இலட்சத்து 65 ஆயிரத்து 722 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 27 இலட்சத்து 49 ஆயிரத்து 37 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதில் அமெரிக்காவில் மட்டும்  3 கோடியே 63 இலட்சத்து 6 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.56 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  உலக சுகாதார அமைப்பு   வெளியிட்ட அறிக்கையில், “உலக அளவில் கடந்த 6 வாரங்களாக கரோனா மூலம் குறைந்து வந்த உயிரிழப்பு நின்றுவிட்டது. அதேசமயம், கடந்த ஒரு வாரமாகப் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதாவது 21-ம் தேதி வரையில் உலக அளவில் 33 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில், அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில்தான் கடந்த ஒரு வாரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிதாகப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே இருந்த  கொரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்  பரவல் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் பி.1.1.7 வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் அதிகரித்து, பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்- ரிட் மனு மீது இன்று விசாரணை

பெருந்தோட்ட தொழிலாளர்களின், 1000 ரூபாய் நாளாந்த ஊதிய அதிகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று   விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அண்மையில் தேயிலை, இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு, வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த வர்த்தமானியை செயலிழக்க செய்யுமாறு கோரி, 20 பெருந்தோட்ட கம்பனிகள் ஒன்றிணைந்தே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளன.

இதில் பிரதிவாதிகளாக தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ர, தொழிலமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, உள்ளிட்ட 18 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மாநகரம் முடக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்,  நகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி  தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றையதினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.

யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

அதன் படி யாழ் நகர பகுதியில் அதிகளவான காவல்துறையினர், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  இணைந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வட மாகாணத்தில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

school 2 யாழ். மாநகரம் முடக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

இதற்கமைய பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒருங்கிணைப்பதனை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

காலனீயக் குடியேற்றங்களை நிறுவும் நோக்குடன் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இஸ்ரேல் யூத தேசிய நிதியம் மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன நிலங்களை வாங்கி, அவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்துவதைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயற்பாடு எனப் பெயரிட்டு அழைக்கிறது.

தீவிர வலதுசாரிகளான இந்துத்துவ தேசிய அமைப்புகள் பாசிசத் தன்மையுள்ள தங்கள் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் அதனைக் காலனீயத்திலிருந்து மீளுதல் என்றும் இனவாதத்துக்கு எதிரானதென்றும் அழைக்கிறார்கள். அதேவேளை மியன்மாரில் இனவழிப்பை நியாயப்படுத்துகின்ற பௌத்த துறவிகள் ‘அமைதிக்கான சமயம்’ – பௌத்தம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்காவில் பல இடங்களில் வரி விலக்களிக்கப்பட்ட பல நிலையங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைகளுக்கும், முற்று முழுதாக வன்முறை ஏதுமற்ற ஏனைய செயற்பாடுகளுக்கும் நிதி அளித்ததற்காக அமெரிக்காவிலுள்ள முஸ்லிம் மற்றும் பாலஸ்தீனத்தைச் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டு, அவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்ட அதே வேளை, முஸ்லிம் மக்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் எதிராக வன்முறைகளைத் தூண்டுபவர்கள் அரசிடமிருந்து வரிவிலக்குகளைப் பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.

WhatsApp Image 2021 03 20 at 11.03.50 PM தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்குகின்ற செயற்பாட்டு வலையமைப்பை அப்படிப்பட்ட அபத்தங்கள் வெளிக்கொணர்கின்றன. இவை இராணுவ இயந்திரங்கள், மற்றும் சிறைச்சாலைத் தொகுதிகளைப் போன்று ஆழமாக வேரூன்றியிருக்கும் அடக்குமுறைக்கான கட்டமைப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இதிலே உள்ள மாறுபாடு என்னவென்றால் தொண்டு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவை நன்மை செய்தல் அல்லது அன்பு செய்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. இங்கே அன்பு (பிறரன்பு) என்பது இலத்தீன் மொழிச் சொல்லான caritas என்ற சொல்லின் நேரடி மொழியாக்கம் ஆகும்.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமைத்தளையை ஒழிக்கப் போராடிய ஆர்வலர்களில் பலராலும் நன்கு மதிக்கப்பட்ட ஒருவரான ரூத் வில்சன் கில்மோர் (Ruth Wilson Gilmore) கூறியது போன்று  பேருபகாரம் (philanthropy) என்பது சமூகத்தில் களவாடப்பட்ட வேதனங்களைத் தனித்தனியாகக் கொடுப்பதாகும். உண்மையில் ரூத் குறிப்பிடுவது போன்று பரோபகாரத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் செல்வம் ‘இருமுறை களவாடப்பட்டதாகும்’. இவை அறவிடப்பட்ட வரிகளினால் பெறப்பட்ட இலாபத்தைக் குறிக்கும். பூர்வீகக் குடிகளின் நிலங்களைக் களவாடி உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசைப் பார்க்கும் போது, அமெரிக்காவில் தொண்டு நிறுவன ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில் இது மும்முறை களவாடப்பட்டதாகும். உண்மையில் இது இனவழிப்பை ஒத்த ஒரு செயலாகும்.

எடுத்துக்காட்டாக, யூத தேசிய நிதியத்தின் அமெரிக்கக் கிளை, குஷ் எற்சியோன் (Gush Etzion) இலுள்ள குடியேற்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத் திட்டங்களில் தாம் வகிக்கும் பங்கு தொடர்பாக வெளிப்படையாகவே விளம்பரம் செய்கிறது. அதே நேரத்தில் “குடியேற்றங்களைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தாம் எவ்வித பங்கும் இப்போதோ அல்லது கடந்த காலத்திலோ வகிக்கவில்லை” என்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டிருக்கிறது.

பச்சைக் கோடு (Green Line) தொடர்பாக குறிப்பிட்ட அமைப்பு கொடுத்திருக்கும் விநோதமான வரைவிலக்கணத்திலிருந்து இந்தக் குழப்பம் உருவாகியிருக்கலாம். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலைப் பிரித்துக்காட்டும் கோட்டை இச்சொல்லாடல் குறிக்கிறது. இப் பச்சைக் கோட்டை JNF-USA என்ற அமைப்பு JNF அங்கே நட்ட மில்லியன் கணக்கிலான மரங்களைக் குறிக்கும் என்று ஒருமுறை விசித்திரமாகத் தெரிவித்திருந்தது.

  WhatsApp Image 2021 03 20 at 11.03.34 PM தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

JNF USA என்ற அமைப்பின் முன்னணிச் செயற்பாடான நெகேவ் திட்ட வரைபடம் இந்த பச்சைக் கோட்டின் இருபுறத்திலும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் காலனீய செயற்பாடுகளின் தொடர்ச்சியைக் குறித்து நிற்கிறது. இஸ்ரேலின் 1967ம் ஆண்டுக்கு முன்னரான எல்லைக்குள் இருக்கும் நகாப் (நெகேவ்) பாலைவனத்திலிருந்து பாலஸ்தீன பெடுவின் (Bedouin) குடிகளை அப்பகுதியிலிருந்து அகற்றும் செயற்பாடு தொடர்பான வரைபடம் இதுவாகும். இந்தப் பச்சைக் கோட்டின் இருபுறமும் நடப்பட்டிருக்கின்ற பல இலட்சக் கணக்கிலான மரங்கள், இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பூர்வீகக் குடிகளின் வாழ்விடங்களின் அழிவுகளை மறைக்கவும் அந்த நிலங்களைக் கபளீகரம் செய்யும் செயற்பாட்டைத் தொடரவும் உதவுகின்ற ஒரு காட்டுப்பகுதியாகவும் திகழ்கிறது.

உதாரணமாக, யூத தேசிய நிதியம் மற்றும் நற்செய்திக் கிறீஸ்தவ ஊடக நிறுவனமான கோட் ரிவி (GodTV) ஆகிய இரு சமய அமைப்புகளின் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படும் ~கோட்ரிவி வனம்’ பெடுவின் பூர்வீக மக்களின் கிராமமான அல்-அராக்கிப் (Al-Araqib) என்ற கிராமத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த கோட்ரிவி நிறுவனமும் அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் என்ற தரத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்ரேலில் உள்ள யூத மக்களை ‘இயேசுவின் நற்செய்தி’ என்ற கிறித்தவ பிரிவுக்கு மதம் மாற்றுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டில் இந்த கோட்ரிவி ஊடகம் கடந்த வருடம் இஸ்ரேலின் ஊடக வலையமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது. ஆனால் பூர்வீக நிலங்களைக் காலனீயப் பிரதேசங்களாக மாற்றுகின்ற ‘கோட்ரிவி வனத்தின்’ செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

மூன்று வாரங்களுக்கு முன்னர் அல்-அராக்கிப் என்ற இந்தக் கிராமம் 183வது தடவையாக இடித்து அழிக்கப்பட்டது. பெடுவின் நாக்பா பிரதேசத்தின் தொடர்ச்சியாக விளங்குகின்ற இக்கிராமம் அயல் வைஸ்மன் (Eyal Weizman) என்பவரின் வார்த்தையில் 90 வீதமான பெடுவின் மக்களின் வாழ்விடங்கள் பாலியல் வன்புணர்வு, படுகொலைகள், இடமாற்றங்கள் போன்ற செயற்பாடுகளின் காரணமாக ~சித்திரவதைக் கிராமங்களாக’ மாற்றப்பட்டிருக்கின்றன.

வன்முறைகள் மூலமாக மக்கள் வெளியேற்றப்பட்டு வெறுமையான நிலங்களாக மாற்றப்பட்ட இந்தப் பிரதேசம் ~சூனியப் பிரதேசம்’ என்றும் “இஸ்ரேல் அரசினால் இப்பிரதேசம் மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது” என்றும் JNF USA இன் விளம்பர அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இது பழைய காலனீயக் கட்டுக்கதையான “terra nullius” அதாவது மக்கள் குடியிருக்காத பிரதேசங்கள் என்ற சொல்லாடலை நினைவூட்டுகிறது. இப்பிரதேசம் அமெரிக்க  JNF இன் நிதியுதவியுடன் விரைவில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும்  ~புதிய உலக சீயோனிச கிராமமாக’ (new World Zionist Village) மாற்றப்படவிருக்கிறது.

இதே வேளையில்  இந்த JNF அமைப்பு தாராள குணத்துடன் வழங்கும் நன்கொடைகளின் பயனாளிகளாக பெடுவின் மக்கள் பெயரிடப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு தான் ஏனைய நாடுகளிலும் குடியேறியவர்களும் பூர்வீகக் குடிமக்களை நோய்களிலிருந்தும் ஏனைய பிரச்சினைகளிலிருந்தும் காப்பதற்கான சேவைகளை வழங்குவதாக தம்மைப் புகழ்ந்துகொண்டார்கள். இந்நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காலனீயவாதிகளே காரணம் என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

கோட்ரிவி உடன் JNF கொண்டிருக்கின்ற பிரச்சினைக்குரிய இந்த உறவு சுட்டிக்காட்டுவது போல இஸ்ரேலின் காலனீய ஆட்சிக்கு உறுதியான ஆதரவையும் பெருமளவான நிதியுதவியையும் வழங்கி வருகின்ற அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களின் கூட்டிணைப்பைப் பொறுத்தளவில் இது ஒரு பகுதி மட்டுமே ஆகும். அமெரிக்க உள்நாட்டு வருமான சேவைகளின் தரவுத்தளத்தை (data base) தற்போது ஒருவர் ஆய்வு செய்தால், அங்கு கிட்டத்தட்ட 30 தொண்டு நிறுவனங்கள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களுக்கு நிதியை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பதை அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம். குஷ் எற்சியோன் தாபனத்தையோ (Gush Etzion

Foundation) அல்லது ஏரியலின் அமெரிக்க நண்பர்கள் (American Friends of Ariel) போன்ற தாபனங்களையோ இதற்கு உதாரணங்களாகக் காட்ட முடியும்.

‘இஸ்ரேல் சமூகங்களின் கிறீத்தவ நண்பர்கள்’ (Christian Friends of Israeli Communities) என்ற அமைப்பின் உதவியுடன் அமெரிக்க மக்கள் ஒரு குடியேற்றத்தைத் தத்தெடுக்க முடியும். அல்லது ‘இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் நண்பர்கள்’ என்ற அமைப்பின் (Friends of the Israeli Defence Forces – FIDF) உதவியுடன் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு சேனையைத் தத்தெடுக்க முடியும். வெளிநாடுகளில் உள்ள இராணுவங்களுக்கு நிதியளிப்பதில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதிலும் இந்த FIDF என்ற அமைப்பு மட்டும் பிரபலமான நபர்களைக் கொண்டு நடத்தப்படும் கொண்டாட்ட நிகழ்வுகள் மூலம் பல மில்லியன் டொலர்களை வருடாவருடம் இஸ்ரேல் இராணுவத்துக்காகச் சேகரிக்கிறது.

காஸாவிலுள்ள மனிதாயத் திட்டங்களுக்கு அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்குவது ஹமாசினால் ஏற்படுத்தப்படும் சாவுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. “ஹமாசுக்கு நிதியுதவி வழங்குவதும்” “ரவையேற்றப்பட்டுச் சுடுவதற்குத் தயாரான ஒரு துப்பாக்கியை ஒரு குழந்தையிடம் கொடுப்பதும் ஒன்று தான்” என வாதிடப்படுகிறது. இதே வேளையில் குடியேற்றங்களுக்கு ஆதரவை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்படுகின்ற வழக்குகள் அமெரிக்க நீதிமன்றுகளினால் தூக்கியெறியப்படுகின்றன.

இவ்வாறாக எந்தவிதத்திலும் தண்டிக்கப்படாமல் இருக்கின்ற இந்த இரும்புக் குவிமாடத்திலிருந்து (Iron Dome – எதிரிகளால் ஏவப்படும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கியழிக்கும் இஸ்ரேலின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பழிப்புக் கட்டமைப்பு) தான் குடியேற்ற – காலனீய வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு படிநிலைக்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்குகின்ற நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் பல மில்லியன் டொலரை வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றன.

பாலஸ்தீன மக்களின் வீடுகளைக் கையகப்படுத்துவதிலிருந்து குடியேறிகளின் இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவதிலிருந்து (இவர்களின் துப்பாக்கிகள் உண்மையாகவே ரவையேற்றப்பட்டிருக்கும்) பாலஸ்தீன மக்களைக் கொலை செய்யும் அல்லது அவயவங்களை இழக்கச் செய்யும் குடியேறிகளை விடுவிப்பது வரை இந்த குடியேறி-காலனீய வாழ்க்கை வட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பாலஸ்தீன மக்கள் மேல் தாக்குதலைத் தொடுக்கின்ற யூத குடியேறிகளில்  மேல் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய சட்ட அமைப்பான ஹொனேனு (Honenu) என்ற அமைப்புக்கும் குறிப்பிட்ட நபர்களின் குடும்பங்களுக்கும் நிதிவழங்குபவர்களில் அமெரிக்கர்களும் உள்ளடங்குவர்.

குடியேறிகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளும் ‘கோலியாத்துக்களை’ எதிர்த்துப் போராடும் துணிவும் தைரியமும் நிறைந்த ‘தாவீதாக’ ஹொனேனு அமைப்பு தன்னைக் காட்சிப்படுத்துகிறது. தாவீது வெறும் கற்களை மட்டுமே நம்பியிருந்தார். ஆனால் குடியேறிகளின் இச்சமூகங்களிடம் குறிபார்த்துச் சுடும் கருவிகள், ஆயுதந் தரித்த அங்கிகள், thermal imaging என அழைக்கப்படும் இரவு நேரப்பார்வையை மேம்படுத்தும் தொழில்நுட்பம், இன்னும் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் அதிநவீன பொறிமுறைகள் என்பன வழங்கப்பட்டிருக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் வழங்குகின்ற நிதியிலிருந்தே இவை அனைத்தும் கிடைக்கின்றன என்பதை மறந்துவிடலாகாது.

இதே போன்ற கோலியாத்து – தாவீது சிந்தனை இந்துத்துவ, பௌத்த அமைப்புகளாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்களை எதிர்த்துப் போராடுகின்றோம் என்ற போர்வையில் அவர்களையும் ஏனைய சிறுபான்மை மக்களையும் காலால் மிதிக்கின்ற செயற்பாடுகளை இந்தியாவிலும் மியான்மாரிலும் அவதானிக்கக்கூடியதாகவிருக்கிறது.

இந்து இராச்சியத்தின் புதிய தாயகமாக அமெரிக்கா தற்போது மாறியிருக்கிறது. இந்துத்துவ கொள்கைகளைப் பறைசாற்றும் இணையத்தளங்களை அவதானிக்கும் போது, 2020ம் ஆண்டில் இந்தியாவைவிட அமெரிக்காவில் இருந்து தான் இந்த இணையத்தளங்கள் மிகவும் அதிகமாக இயக்கப்பட்டன. இந்த இணையத் தளங்களில் பல ~இந்து சுயம்சேவக சங்கம் (Hindu Swayamsevak Sangh -HSS) அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் (Vishwa Hindu Parishad of America -VHPA) போன்றவை அமெரிக்காவில் தொண்டு நிறுவனங்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக அயோத்திய விவகாரம் தொடர்பாக இந்திய உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எடுத்த பதில் நடவடிக்கையை உற்றுநோக்கிப் பாருங்கள். புராதன பாபர் மசூதி இடித்தழிக்கப்பட்டதை எந்தவிதத்திலும் கண்ணோக்காது சட்ட ஒழுங்கை மீறும் மிக மோசமான செயலாகச் சித்தரிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான இனங்கலவரங்களைத் தூண்டி, மசூதியை இடித்தழித்த செயலை ஒரு வகையில் சட்டபூர்வமாக்கியது. VHPA  அமைப்பைப் பொறுத்த வரையில் இது “ஐந்து நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த காலனீய அடக்குமுறைக்கு எதிராக அடையப்பட்ட வெற்றியாகும்.”

விமானப் பயணம், பிளாஸ்ரிக் அறுவைச்சிகிச்சை, மரபணு தொடர்பான விஞ்ஞானங்கள் போன்றவற்றைத் தாம் கண்டுபிடித்ததாக மார்தட்டுகின்ற இந்துத்துவ தேசியவாதிகள், காலனீய அடக்குமுறைக்கு இப்போது ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கே இவர்கள் காலனீயவாதிகள் என்று அழைப்பவர்கள் ஏழ்மையில் வாடுகின்ற, அரசியலில் ஓரங்கட்டப்பட்டு பலவிதமான தாக்குதல்களுக்கு உள்ளாகும் சமூகங்களாகும்.

முஸ்லிம் மக்களை ஜிம் க்ரோ (Jim Crow) காலத்தில் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு இருந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். தற்போது அமெரிக்க குடியுரிமைப் போராட்டம், தமது புனித நிலங்களை மீட்கின்ற பூர்வீகக் குடிகளின் போராட்டங்களுடன் தமது அடக்குமுறைச் செயற்பாடுகளை ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் துணிந்துவிட்டதைக் காணலாம். (இஸ்ரேல் குடியேறிகள் கறுப்பினச் செயற்பாட்டாளரான ரோஸா பாக்ஸ் என்பவருடன் தம்மை ஒப்பிட்டார்கள்).

மனித உரிமைகளைத் துச்சமென மதிக்கின்ற இந்தியக் கொள்கைகளை விமர்சிக்கின்ற அரச செயற்பாட்டை இல்லாமற் செய்கின்ற செயற்பாடுகளை அமெரிக்காவில் முன்னெடுத்து வரும் அதே நேரம், (அமெரிக்க பாராளுமன்ற முற்றுகையில் இந்த அமைப்பின் சில உறுப்பினர்களின் வகிபாகம் மறக்கப்பட முடியாதது) பாபர் மசூதியின் இடிபாடுகளுக்கு மேல் இராமர் கோயிலைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு இந்தியாவிலிருந்து உரிய அனுமதியைப் பெறும் முயற்சியில் தற்போது இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்ற ‘வெளிநாட்டுப் பங்களிப்புகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்திலிருந்து’ விதிவிலக்கைப் பெறுவதற்காகவே இந்த அனுமதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த சட்டத்தைப் பயன்படுத்தியே வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதாகக் குற்றஞ்சாட்டி பன்னாட்டு மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளையின் செயற்பாடுகளை மோடி அரசு கடந்த வருடம் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன்,  மேலும் பல்லாயிரக்கணக்கான சமூக நீதி தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களையும் இலக்கு வைத்தது.

இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புபட்ட பல திட்டங்களுக்கு அமெரிக்காவில் உள்ள பல தொண்டு நிறுவனங்கள் பல மில்லியன் டொலர்களை அனுப்பியதாக 2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு சுட்டிக்காட்டியது. “இந்து தேசத்தில் உள்ளும் புறமும் காணப்படும் எதிரிகளுக்கு எதிராக ஆதிவாசிகளைப் பயிற்றுவிப்பதற்காகவே ‘ஒரு ஆசிரியரைக் கொண்ட பாடசாலைகள்’ நிறுவப்பட்டிருக்கின்றன” என்று VHP இன் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசியிருந்தார்கள்.

WhatsApp Image 2021 03 20 at 11.04.07 PM தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

மிக அண்மைக்காலத்தில் அமெரிக்க ஏக்கல் தாபனம் ஒழுங்கு செய்த ‘மாற்றத்துக்கான மாநாட்டில்’ 110,000 பேர் லக்னோவில் பங்குபற்றியிருந்தார்கள். இந்த மாநாட்டில் முக்கிய பேச்சாளராகப் பங்கு வகித்தவர் உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சரான பாரதீய ஜனதாக் கட்சியைச் சார்ந்த யோகி ஆதித்யநாத் ஆவார். மாற்றத்துக்கான அவரது அவரது திட்டங்கள் எவை என்பதை “முஸ்லிம்கள் பச்சை வைரசுக்கள்” என்ற அவரது கூற்றிலிருந்தே இனங்கண்டு கொள்ளலாம்.

ஆதித்யநாத்தின் சகாவாகத் திகழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பவரும் மியான்மாரின் முன்னணி இனவழிப்புத் துறவியுமான சிற்றகு சயாடோ (Sitagu Sayadaw) அமெரிக்கா முழுவதும் வரிவிலக்களிக்கப்பட்ட மத நிலையங்களின் ஒரு வலையமைப்பை நடத்துகிறார். ரோகிங்கியா மக்களின் இனவழிப்புக்குப் பொறுப்பான மியான்மாரின் இராணுவத் தலைவர்களுக்கு ஒரு கையால் தடை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்கா, மற்றக் கையால் இனவழிப்பு என்ற நெருப்பை மூட்டிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய நபருக்கு நிதியுதவியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

‘பௌத்த பயங்கரத்தின் முகம்’ என்று வர்ணிக்கப்பட்ட அமைப்புக்கு விராத்து (Wirathu) என்ற துறவி கருத்தியல் தந்தையாக இருக்க, ரோகிங்கியா திருமணங்களுக்கும்  பிறப்புகளுக்கும் தடை ஏற்படுத்துகின்ற ‘இன மதப் பாதுகாப்புச் சட்டங்கள்’ என்ற முன்னெடுப்புக்கு பின்னணியாக இருக்கின்ற மபாத்தா (MaBaTha) என்ற அமைப்பின் துணைத் தலைவராக சிற்றகு சயாடோ இருக்கிறார். (இனப்பெருக்கத்தை தடைசெய்வது ஒரு இனவழிப்பு செயற்பாடாகும் என்று ஐநாவின் இனவழிப்பு சாசனமும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற சட்டமும் வரையறை செய்கிறது).

இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்கு வழங்கிய பங்களிப்புகளின் மூலம் சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளராக வர்ணிக்கப்படும் இந்தத் துறவி, சமகாலத்தில் துறவிகளுக்கும் இனவழிப்பை மேற்கொள்ளும் இராணுவத்துக்கும் இடையே நெருங்கிய உறவு பேணப்பட வேண்டும் என வலியுறுத்தி ரோகிங்கியாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மனிதப் பேரிடரைத் தூண்டியிருக்கிறார். பன்றிகளையும் காளைமாடுகளையும் போன்று முஸ்லிம் மக்களை வேலிக்குள் வைத்திருப்பதற்காக இஸ்ரேலைப் பாராட்டிய அவர், ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் முழுமையான மனிதர்கள் அல்ல என்று சொல்லி அந்த மக்களின் படுகொலையை நியாயப்படுத்தியிருக்கிறார்.

WhatsApp Image 2021 03 20 at 11.04.23 PM தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

சிலுவைப் போரிலிருந்து காலனீய காலம் வரை,  மனிதகுலம் மேல் கொண்ட பற்று என்று சொல்லி முழு மனிதத் தன்மையற்றவர்கள் எனக் கணிக்கப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறையை நியாயப்படுத்த இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சிற்றகு சயாடோ வெளிப்படுத்திய கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.

அரசியல் மெய்யியலாளரான ஹனா அரெண்ட் (Hannah Arendt) தீமையின் வழமை பற்றிச் சொன்னார். ஆனால் இங்கே தீமை நன்மை பயப்பதாக வாதிடப்படுகிறது. வன்முறை சாதாரணமானதாக மட்டும் நியாயப்படுத்தப்படவில்லை. ஆனால் அது அறநெறி ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது எனவும் வாதிடப்படுகிறது.

இப்படிப்பட்ட காலனீய காலத்து பிறரன்புக்கு எதிராக சமூகங்களும் இயக்கங்களும் தமது காலனீயத்துக்கு எதிரான தமது பிறரன்பு வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. மியான்மாரிலிருந்து தொடங்கி இந்தியா இஸ்ரேல் ஊடாக அமெரிக்கா வரை இனவழிப்புத் தேசியத்துக்கு எதிராகவும் பாசிசத்துக்கு எதிராகவும் இச்சமூகங்கள் சமயங்களுக்கிடையேயும்  சமூகங்களுக்கிடையேயும் உறவைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

அன்பு (பிறரன்பு) நடைமுறைப்படுத்துப்படும் போது (நல்ல அரசுகள் என்று கருதப்படுபவை அதனைத் தண்டிக்கும் போதும் கூட) அது நீதியாக வெளியில் காட்சியளிக்கின்றது என்று கோணெல் வெஸ்ட் (Cornel West) என்ற மெய்யியலாளர் கூறியிருக்கிறார்.

நன்றி: அல்ஜசீரா