Home Blog Page 1306

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் விடத்திற்கு தீர்வு காண அமெரிக்கா தலையிட வேண்டும் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது.
IMG 20210328 WA0008 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 1500 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் 1500 ஆவது நாளை முன்னிட்டு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நினைவாக வழிபட்டு தேங்காய் அடித்து வணங்கி விட்டு அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர வீதி ஊடாக ஊர்வலமாக வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்ட கொட்டகை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG b68a691389c5f8ae95fa6bef8d1e84ad V காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், எங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா தேவை என்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர். இதன்போது தாய்மார் கண்ணீர் மல்க கதறி அழுத்து தமது பிள்ளைகள் தமக்கு வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று நாம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம். எங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு தொடர் போராட்டம் 1500 வது நாளை எட்டியது. தமிழர்கள் விரும்பும் தீர்வுகள் இல்லாவிட்டால், நம்முடைய மற்றும் பிற தமிழர்களின் போராட்டங்கள் தொடரும். ஒரு புதிய தலைமுறையினரும் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் போராட்ட வடிவம் நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நவீனமானதாக இருக்கலாம்.

IMG 20210328 WA0008 1 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க இப் போராட்டத்தின் முதல் நாள் முதல் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அழைத்தோம். தமிழர்களைக் கொல்வது, நமது பொருளாதாரத்தை அழிப்பது, சிங்கள இராணுவத்தால் தமிழ் பெண்களின் பாதிப்பு, நமது நிலத்தை கையகப்படுத்த புத்த மதகுருவின் ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் மட்டுமே தடுக்க முடியும்.

DSC00020 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவான நேட்டோ வைக் கொண்டுள்ளன. அவை உலகில் பல சிக்கல்களைத் தீர்த்தன. இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யு.என்.எச்.ஆர்.சி அமர்வில் அவர்களின் போலி நடுநிலைமை தமிழர்களுக்கு உதவ இந்தியா தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்தியா ஸ்ரீலங்காவுடன் நட்பாக இருக்க விரும்புகிறது. அதாவது அவர்கள் தமிழர்களை ஆதரிக்கவில்லை என்பதாகும்.

7கோடி தமிழர்களைக் கொண்ட நாடு. தமிழர்களுக்கு உதவ இந்தியாவை அழைப்பது எங்கள் கடமை. 13 ஆவது திருத்தம் 5 வீத பிரச்சினையை மடடும் தீர்க்க முடியும். ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும்.

எங்களைப் பொறுத்தவரை, இரண்டு மொழிகள் இருக்கும்போது, சமஷ்டி ஒரு நிரந்திர தீர்வாக இருக்க முடியாது. தமிழ் இனப்படுகொலையைத் தவிர்க்க, சமஷ்டிசிக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வு நமக்குத் தேவை. இது கனேடிய மாதிரியான பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தமிழ் தாயகம் மாதிரியாக இருக்கலாம்.

IMG 20210328 WA0023 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

யு.என்.எச்.ஆர்.சி தீர்மானம் பற்றியது என்னவெனில், ஐ.நா எந்த இனப் பிரச்சினையையும் அமெரிக்க தலையீடு இல்லாமல் தீர்க்கும் வரலாறு இல்லை. எனவே எங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவை அழைக்கிறோம். பல தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அமெரிக்காவை அழைக்கும் எங்கள் கருத்தை எப்போதும் நிராகரித்தனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் எங்கள் பந்தலுக்கு வர விரும்பவில்லை. ஏனெனில் அமெரிக்கக் கொடியுடன் படம் எடுப்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிடியாது என்பதால்.

DSC00024 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

இப்போது அவர்களில் பெரும்பாலானோர் நமது அரசியல் பிரச்சினையை அமெரிக்காவால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த உரையை விட்டுச் செல்வதற்கு முன், மாகாணத் தேர்தல்களில் வாக்குகளைப் பெற சுமந்திரனும் சாணக்கியனும் செயல்படுகிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமந்திரன் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர் என்றும் சாணக்கியன் ஒரு முன்னால் ராஜபக்ச கட்ச்சி உறுப்பினர் என்றும் நாம் அனைவரும் அறிவோம். சிங்கள சூழலில் ஆடம்பர வாழ்க்கை வாழ வாழ இருவருக்கும் ஒரே குறிக்கோள் உள்ளது.

DSC00032 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

சுமந்திரன் ஆட்சி மாற்றத்தைப் பெற முயற்சிக்கிறார். தமிழர்கள் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு பேரழிவு தரும். 1000 விகாரைகள், நெடுங்கேணியில் 4000 சிங்கள குடியேற்றங்கள் மற்றும் புத்த மதத்திற்கு முதன்மையான இடம், வட கிழக்கு பிரிவினை, ஏக்கியா ராஜ்ஜிய இவை யாவும் முன்னைய ஆட்சி மாற்றத்தின் விளைவு. இதை தான் ரணில்
புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை என்றாலும், பௌத்த நாடு என்பதை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது பெரு வெற்றி” என்றனர்.

யாழ்.திருநெல்வேலியில் உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  இந்த அறிவிப்பு குறித்து  தெரிவிக்கையில், “திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள் நுழைவதும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் ஆகியனவும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. எனினும் அவசியத் தேவை, தொழில் நிமித்தம் காரணமாக வெளியே செல்கின்றவர்கள் தங்களது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  நேற்றைய தினம் கூட 244 குடும்பங்கள், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் பெரும்பாளானோர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே திருநெல்வேலி பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டு, அபாய இடர் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது”  என்றார்.

சொந்த இராணுவத்தினராலையே  படுகொலை செய்யப்படும் மியான்மரிகள்- ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

‘இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும்’ என்றும் ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே, மியான்மரில் ஜனநாயகம் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில்  இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  114 பேர்  பலியாகியுள்ளனர்.

தேர்தலில்  முறைகேடு நடந்ததாக குற்றம் சுமத்தி ஆங் சான் சூச்சி  உள்ளிட்ட தலைவர்களை கைது செய்த இராணுவம்  தன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு  இராணுவம் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. 300-க்கும் மேற்பட்ட  நாட்டு குடிமக்களை சுட்டுக் கொன்றுள்ளது.

இந்தநிலையில் நேற்று யாங்கூன் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் இராணுவத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். மேலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தை நசுக்குவதற்காக இராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 114 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில்,இராணுவ தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தற்போது  மியான்மர் நாட்டில் இராணுவத்தின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கும் சிஆர்பிஹெச் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின்  மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய   ஜெனீவாவில்  புதிய செயலக  அமைப்பு

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவை ஜெனீவாவில் செயலகமொன்றை அமைத்துள்ளது.

இது குறித்து மனித உரிமை பேரவையின் செயலாளர் Goro Onojima , “உறுப்புநாடுகளிற்கு வழங்கியுள்ள சுற்றுநிரூபத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட செயலகம் குறித்தும் அதற்கு வருடாந்தம் அமெரிக்க டொலர் தேவைப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செயலகம், விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும். மேலும்  உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,  இந்த செயலகம்  அமைக்கப்படுவதன் மூலம், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும்  இலங்கையின் யுத்த குற்றச்சாட்டுக்களுடக் தொடர்புபட்ட அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அசாத் சாலி கைது – பொலிஸ்மா அதிபருக்கு சிறீலங்கா முஸ்லீம் கவுன்சில் கடிதம்

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை  கவலை அளிப்பதாக   சிறீலங்கா முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லீம்  கவுன்சில் அனுப்பியுள்ளது.

அதில், “இலங்கையின் முஸ்லீம் சமூகத்தில் காணப்படும் ஒரு சில தீவிரவாதிகள் உட்பட அனைத்து வகையான தீவிரவாதம் பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராகவும் அசாத் சாலி குரல்கொடுத்தவர்.

முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதமயப்படுத்தப்படுவது குறித்து நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு சில முஸ்லீம் தலைவர்களில் அவரும் ஒருவர்.

காவல்துறையினருக்கு அவர் இது குறித்து பலதடவை எழுதியுள்ளார் பல செய்தியாளர் மாநாட்டில் அவர் இது குறித்து கருத்துவெளியிட்டுள்ளார் .

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அசாத்சாலி கைதுசெய்யப்பட்டுள்ளமை முஸ்லீம் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எப்போதும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பயங்கரவாதத்தை கண்டித்தவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஜஹ்ரான் மீது முதலில் குற்றச்சாட்டை சுமத்தியவர் அசாத் சாலி.

பொலிஸ்மா அதிபர் பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொண்டு அசாத்சாலிகுற்றமற்றவர் என்பது உறுதியானால் அவரை விடுதலை செய்யவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனையவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் விடுதலை செய்யவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திற்கு ஜோ பைடன் எதிர்ப்பு

அமெரிக்காவின் ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய வாக்களிப்புச் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து கருப்பின மக்கள் வாக்களிப்பதை அதிகம் தடுக்கக் கூடியதாக உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சி பெரும்பான்மை உள்ள ஜோர்ஜா மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தல் நம்பிக்கை சட்டம் 2021 (The Election Integrity Act of 2021) நிறைவேற்றப்பட்டது. 2020ம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தபால் வாக்குகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் இரண்டாவது மாநிலமாகியுள்ளது ஜோர்ஜா.

புதிய சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்:

1 தபால் வாக்குச் சீட்டு பெறுவதற்கு தற்போது கையெழுத்துப் போட்டால் போதுமானது. ஆனால், புதிய சட்டப்படி அடையா ஆவணங்களை சமர்ப்பித்தே வாக்குச்சீட்டு பெற முடியும்.

2 வாக்களிப்பதற்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு தண்ணீர், உணவு விநியோகம் செய்வதை எல்லா வாக்குச்சாவடிகளிலும் தடை செய்வது.

3-பிரச்சனை ஏற்பட்டால், வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம்.

4-தபால் வாக்குகளை செலுத்துவதற்கான பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது. (இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்படும்).

5-போதிய வாக்கு வித்தியாசம் இல்லாதபோது நடத்தப்படும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்துவதற்கான கால அளவை குறைப்பது போன்றவை புதிய சட்டத்தின் சில அம்சங்கள்.

இந்நிலையில், இந்த புதிய சட்டம் 20-ம் நூற்றாண்டில், அமெரிக்காவின் தென்பகுதியில் நடைமுறையில் இனப் பாகுபாட்டுக் கொள்கைகளை ஒத்திருப்பதாக கூறிய பைடன் இது ‘கொடுமை’ என்றும் தெரிவித்தார்.

 இந்தப் பிரச்னை தொடர்பாக ஜோ பைடன்  ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் “மீண்டும் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி, மீண்டும் மீண்டும் வழக்குத் தொடுத்து கடைசியில் வெளியான முடிவு சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையின் மீதான, பாதுகாப்பான ஜனநாயக நடைமுறை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

ஜோர்ஜியர்களின் வாக்களிக்கும் உரிமையை, தங்கள் கருத்துகளின் வலிமையால் அவர்கள் தங்கள் இயக்கங்களை வெற்றி பெற வைப்பதை கொண்டாடுவதற்குப் பதிலாக அமெரிக்க இயல்புக்கு மாறான ஒரு சட்டத்தை அவசரமாக கொண்டுவந்து மக்களின் வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் வகையில் ஒரு சட்டத்தை குடியரசுக் கட்சியினர் கொண்டுவந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.

இது குறித்து மேலும் கூறிய அவர், பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் குடியரசுக் கட்சியினரால் கொண்டுவரப்படும் இத்தகைய சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்தின் மீதும் நல்ல மனசாட்சியின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த சட்டங்கள் குறித்து நாட்டின் சட்டத்துறை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த  தவறு, எமக்கான பாடம் – பங்களாதேஷ்

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த  தவறுகளிலிருந்து  தமது நாடு பாடம்  கற்றுக்கொள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்ளையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற  நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையினால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளமையில் இருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாகவும் ரிஸவி தெரிவித்துள்ளார்.

மேலும் எமது நாட்டின் இறையாணமையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்.

விடுதலையை இலக்காக்கொண்ட போராட்டத்தின் ஊடாக நாம் தற்போது சுதந்திர நாடாக உள்ளோம்.

ஆகவே எமது பெறுவனவுகளைச் சரிவரக் கண்காணிக்கும் அதேவேளை, வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச்செலுத்தக்கூடிய எமது ஆற்றல் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் இருக்கிறோம். என்று பங்களாதேஷ் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனா தனது “கடன் பொறி“ மூலோபாயத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்து வருகின்ற மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளைக் கவர்ந்திழுக்கும் வேளையில், இவ்வாறானதொரு கருத்து வெளியாகியிருப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்…

“தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு.” என்று தமிழரை அடையாளப்படுத்தினர். வேறு எந்த இனத்திற்கும், மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த, தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்திருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும், சமூகம் என்னும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கின்றது என்று தானே அர்த்தம்.

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல்பு எடுத்துக் கூறுகின்றது. மேலும் வீரர் அல்லாதவர்கள் புறங்காட்ட ஓடுவர், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகின்றது. எதிரி நாட்டுப் படையினனை தாக்கும் போதுகூட ஈரமும், இரக்கமும் இருந்ததை காணமுடியும். அக்காலத்தில் தமிழரிடம் அறப்போர் முறையே அமைந்திருந்தது.

PHOTO 2021 02 18 12 27 38 1 வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்...

பசுக்களும், பசுவை ஒத்த பார்ப்பனர்களும், பெண்களும், நோயுடையவர்களும், புதல்வர்களை பெறாதவர்களும், யாம் அம்பு விடுவதற்கு முன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என வீரன் ஒருவர் கூறுவதிலிருந்து தமிழரின் அறப்போர் முறை விளங்கும். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகை படைகளும் போரில் ஈடுபட்டன. புறமுதுகில் அம்பு பட்டு வீழ்ந்து போவதும் மற்றும் புறமுதுகிட்டு ஓடுவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை தமிழ்ப்பரம்பரை. நால்வகைப் படைகளும் உருத்து நின்று போர் புரியும் செருக்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டது.

“கைவேல்களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்” என்றார் திருவள்ளுவர். அதாவது வீரன் வீறிட்ட ஆனையின் மீது தன் வேலை விட்டெறிந்தான். அது அடிபட்டு விழுந்தது. அப்பொழுது மற்றொரு யானை அவனைத் தாக்க வந்தது. இன்னொரு வேல் கிடைத்தால், இந்த யானையை முடித்திடலாமே என்று அங்குமிங்கும் பார்த்தான். அந்நிலையில் அவன் மார்பில் தைத்திருந்த வேல் ஒன்றைக் கண்டான். அதுவரை போர் வெறியில் மேனியிற் பாய்ந்திருந்த வேலையும் அறியாதிருந்த வீரன், அதை ஆர்வத்தோடு பறித்து இழுத்தான். வேழத்தைக் கொல்ல ஒரு வேல் கிடைத்தது என்று மகிழ்ந்தான்.

போர்க்களத்தில் புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல. மார்பிலே காயப்பட்டு, இறப்பதையே பெரிதும் விரும்பினார்கள். இத்தகைய வீரமானவர்களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது. முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனையே தாய் வெட்டிக் கொன்ற காட்சிகளை இலக்கியத்திலே காண்கின்றோம்.

PHOTO 2021 02 18 12 27 47 1 வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்...

போரில் அடிபட்டு, மாண்டுபோன தன் மகன் இறந்த செய்தி அறிந்த ஒரு தமிழ்த் தாய் போர்க்களம் நோக்கி நடக்கின்றாள். இறந்து போன தன் மகன் நெஞ்சிலே அம்பு பட்டு இறந்திருக்க வேண்டும். ஆனால் முதுகில் அம்பு பட்டு புறமுதுகு காட்டி இறந்து போயிருப்பானேயானால்  அவன் வாய் வைத்து பால் குடித்த மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று சபதம் செய்து கொள்கிறாள். போர்க்களத்தில் நெஞ்சிலே அம்பு பட்டு மாண்டு கிடக்கிறான் மகன். அதனைப் பார்த்து அவனை ஆரத்தழுவி, அழும் தாயைத் தான் சங்க இலக்கியங்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றன.

போரில் கணவனை இழந்து தந்தையை இழந்து இறுதியில் தனக்கு உதவியாக இருந்த ஒரே மகனையும் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த புறநானூற்று தாயும் தமிழிச்சி என்பதில் பெருமை கொள்வோம். வீரப்புகழ் வெறும் புனைந்துரையன்று. மிகையுரையன்று. வரலாறு காட்டம் செய்தியே ஆகும். புறப்பொருள் தொடர்பான நாநூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. அதில் பெரும்பாலான பாடல்கள் பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றுகின்றன. இங்கு வீரம் என்பது கல்லைத் தக்குவதும், காளையை அடக்குவதுமல்ல. மற்றும் பொழுதுபோக்கிற்காக அத்தை மகள், மாமன் மகள் மற்றும் சில கன்னியர்களின் மனதில் இடம்பிடிக்க செய்யப்படும் வேலைகள் அல்ல. இங்கு வீரம் என்பது போர்க்களத்தில் புரிந்த சாகசங்களை பற்றியதாகும்.

முப்படைகள் வந்தாலும் போர்க்களத்தில் எதிர்த்து நின்று எதிரியை வென்ற பாகுபலி மன்னர்கள் புறநானூற்று காலத்தில் நாட்டை ஆண்டு வந்திருக்கிறார்கள். கூடலும், கூடல் நிமிர்தமுமாக காதலோடு கொஞ்சிக்குலாவிக் கொண்டிருந்தாலும் போர் என வந்து விட்டால் ஏன் எதற்கு எனக் கேள்வி கேட்காமல் போரிற்கு சென்றுவிடுவார்கள். எனது கணவன் சிறந்த போர் வீரன் என சொல்லிக் கொள்வதையே பெருமையெனக் கருதினர் பெண்கள்.

சங்ககாலத்தில் போர் நிலவும் காலத்தில் போர்க்களத்திற்கு அனுப்புவதற்கு ஆட்களை தேடி பணியாளன் ஒருவன் மக்கள் வசிக்கும் தெருவிற்கு வந்து அங்கு நிற்கும் பெண்ணொருவரிடம் உன் மகன் எங்கே எனக் கேட்ட போது, என் மகன் எங்கு இருக்கிறான் என எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி தங்கி விட்டுப் போன கல் குகையைப் போன்றது. அத்தகைய புலிபோல வீரம் கொண்டவனை போர்க்களத்தில் தான் காணமுடியும் என்றாள்.

PHOTO 2021 02 18 12 27 36 1 வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்...

“வீரப்போர் செய்து பெறும் புண் விழுப்புண்” அதாவது முதுகில் பெறும் புண் புறப்புண் எனப்பட்டது. பெருஞ்சேரலாதன் என்ற மன்னன் சோழன் கரிகால் பெருவளத்தானும் வெண்ணிப் பறத்தலை என்ற களத்தில் போரிட்டனர். கரிகாலன் எறிந்த வேல் சேரலாதனின் நெஞ்சைத் துளைத்து முனை, முதுகின் வழி ஊடுருவி விட்டது. மார்பின் வழியாக பெற்ற புண்தான். ஆனாலும் முதுகிலே புண்பட்டு விட்டதே. இது இழிவு என்று கருதி அந்த வீரன் உண்ணா நோன்பிருந்து (வடக்கிருத்தல் என்று பெயர்) உயிர் விட்டான். வெற்றி பெற்ற வீரத்தைக் காட்டிலும் மார்பின் வழியாக பட்டாலும் அது புறப்புண் தான் என்று உயிர்விட்ட பெருஞ்சேரலாதனின் வீரமே பெருவீரமாகும்.

இந்த சமூகம் பண்பட வேண்டும் என்றால், நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதை தமிழ் இனம் இவ்வுலகத்திற்கு கற்றுக் கொடுத்திருக்கின்றது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டையும் வீரத்தையும் கட்டிக்காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். கொடுப்பதிலும், பெறுவதிலும் மட்டும் பண்பாட்டைக் காட்டவில்லை. வீரத்திலும், பண்பாடடை விதைத்து சென்றவன் தமிழன். இதற்கு புறநானூற்று நூலிலே இதற்கு சாட்சிகள் உள்ளது.

நம் முன்னோர்களின் பேர்க் குணத்தையும், வீரத்தையும் புறநானூற்றில் காண்கிறோம். “என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில் இருப்பான்” என்று மொழியும் தாயின் சொற்களில் கொப்பளிக்கும் வீரம் எவ்வளவு சூடு மிகுந்தது. புறநானூற்றிலிருந்து நாம் எடுத்துப் பேண வேண்டியது இந்த வீரத்தைத் தான்.

உ.டனன்சியா,

முகாமைத்துவபீடம்,

யாழ். பல்கலைக்கழகம்

இந்திய மீனவர்களின் ட்றோளர் படகுகள் கடற்படையினரின் பாவனைக்கு

இந்திய மீனவர்களிடம் இருந்து அரச உடமையாக்கப்பட்ட படகுகளில் இருந்து நல்ல நிலையில் உள்ள  6 ட்றோளர் படகுகளை கடற்படையினருக்கு வழங்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடற்படையின் வடக்கு பிராந்திய  கட்டளைத் தளபதியின் CAN 029 இலக்க  2021-03-14 ஆம் திகதிய எழுத்து மூலமான கோரிக்கைக்கு 2021-03-19 ஆம் திகதிய DC/MC/kayts/AC/2021 இலக்க கடிதம் மூலம் தமது அனுமதியை ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

நீதி அமைச்சின் செயலாளருக்கு முகவரியிட்டு வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர ஆகியோருக்கு பிரதியிட்ட கடிதம் மூலமே இந்த சிபார்சு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்
2019ஆம் 2020 ஆம் ஆண்டுகளிலும் 2021 ஆம் ஆண்டுலிம்  கைது செய்யப்பட்ட IND/TN/08/MM/206, IND/TN/08/MM/ 069, IND/TN/08/MM/2394, IND/TN/08/MM/2589, IND/TN/08/MM/242, IND/TN/08/MM/296 ஆகிய இலக்கமுடைய படகுகள் வழக்குகளின்போது  அரச உடமையாக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியின் CAN 029 இலக்க  2021-03-14 ஆம் திகதிய எழுத்து மூலமான கடிதம் மூலம் தங்களது பாவனைக்கு வழங்குமாறு கோரியுள்ளார்.

இந்த படகுகளை கடற்படையினரிடம் வழங்குவது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. எனவே இது தொடர்பிலான தங்களது மேலான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என மாவட்ட நீதிபதி/ நீதவான், மாவட்ட நீதவான் நீதிமன்றம், ஊர்காவற்றுறை கையொப்பம் இட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல அதிரடியாகத் தடை – விசேட வர்த்தமானி வெளியானது

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விஷேட வர்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum (BTF) , கனேடிய தமிழ் காங்கிரஸ் Canadian Tamil Congress  (CTC), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress (ATC), உலக தமிழர் பேரவை Global Tamil  forum (GTF), கனேடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) , தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation UK (TYO- UK,France,australia,switzerland,Canada), உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு World Tamil Coordinating Committee (WTCC) ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைப்புகள் சார்ந்த தனி நபர்களின் பெயர்களும் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.