இனியாவது ஈழத்தமிழர் இறைமையைக் காப்பாற்ற வேண்டிய உங்கள் கடமையைச் செய்யுங்கள்! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 246

இனியாவது ஈழத்தமிழர் இறைமையைக் காப்பாற்ற வேண்டிய உங்கள் கடமையைச் செய்யுங்கள்! | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 246

சிறிலங்காவின் இன்றைய அரசத் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் ஓராண்டு ஆட்சியைத் திரும்பிப் பார்க்கையில் ஈழத்தமிழரின் இறைமையைச் சிறிலங்காவின் படைபலத்தாலும் அரச பயங்கரவாதத்தாலும் ஆக்கிரமித்து ஒடுக்கும் ஆட்சியாகவே இதுவும் தொடர்கிறது என்பதே உறுதியாகிறது.
இதன் கடந்த வாரச் செயலாக கடல்வளத்திலும் இந்திய இலங்கையின் முக்கிய பகுதியாக உள்ள ஈழத்தின் தீவுப்பகுதியை கொழும்பு அதிகாரிகளின் நேரடி ஆட்சிப்படுத்தலுக்குள் கொண்டு வருவதற்கான தீவுப்பகுதி அதிகாரசபை சட்ட வரைபு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன் வழி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இந்துமாக்கடல் வழிப் பாதைக்கு முக்கியமாக உள்ள ஈழத்தமிழரின் இந்தத் தீவுக் கூட்டங்களை சிறிலங்கா தனது அதிகாரத்தில் உள்ளது என உறுதிப்படுத்தி குறிப்பாக இந்தியாவின் உரிமை பாராட்டலை தடுத்து நிறுத்திச் சீனாவுக்கு மகிழச்சியை அளித்து விட்டு ரணில் அவர்கள் சீனாவுக்கான தனது பயணத்தைத் தொடங்கவுள்ளார். அதே வேளை “என் மண் – என் மக்கள்” எனக் கச்சதீவு மீட்புக்கான வீரப் பாடலமைத்து இராமேஸ்வரத்துக்குப் பாதயாத்திரை ஒன்றை கடந்த வாரத்தில் தொடங்கியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவரான அண்ணாமலை அவர்களுக்கும் அப்பகுதி சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனதிபதியின் அதிகார சபைக்குள் உள்ள பகுதி என முகத்தில் நோட்டிஸ் அடித்து ஒட்டும் வேலையைச் சிறிலங்கா செய்து அவருடைய எதிர்வரும் தேர்தல் வெற்றிக்கான பயணத்தையும் அந்த இலக்கை அடைய முடியாதவாறு தோற்கடித்துள்ளது. ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையிலான அவர்களின் தன்னாட்சியே இந்தியாவினதும் பாதுகாப்புக்கான தேவை என்பதை அண்ணாமலை அவர்கள் பாரதிய சனதா கட்சிக்கு எடுத்துரைத்து சிறிலங்காவின் இறைமைக்குள் ஈழத்தமிழரின் இறைமை பிரித்தானியக் காலனித்துவத்தால் அடைவு வைக்கப்பட்டுள்ள நிலையில் இருந்து ஈழத்தமிழர்கள் முன்னைய நிலையை அடைய உதவ வெண்டுமென்பதே இலக்கின் வேண்டுகோளாக உள்ளது. இல்லையேல் தீவுப்பகுதிக் கடல் வழியான இந்திய பாதுகாப்பு என்றும் கேள்விக்குறியாகவே தொடரும் என்பதே நடைமுறையுண்மை.
மேலும் ரணில் இவ்வாரத்தில் அறிவித்துள்ள “தெங்கு வள முக்கோண வயலம் 02” என்பது பருத்தித்துறை முதல் கொடிகாமம் பளை வழி எங்கெங்கு எல்லாம் சிறிலங்காப் படைகள் தென்னந் தோப்புக்களை குண்டு வீசி அழித்ததோ அந்த அந்த இடங்களில் எல்லாம் மீளவும் தென்னந் தோப்புக்களை உருவாக்கி அவற்றை ‘தெங்கு வள முக்கோண வயலம் 01’ ஆகவுள்ள குருநாகலை மையப்படுத்திய சிங்களப் பகுதிகளுடன் இணைத்து வடக்கில் நிலை கொண்டுள்ள படையினருக்குத் தொழில் முயற்சியாக மாற்றி நிரந்தரச் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியாக உள்ளது.
அவ்வாறே இந்தியாவும் பாக்கிஸ்தானும் அரிசி ஏற்றுமதிக்குத் தடைவிதித்ததை எதிர்கொள்ள ஈழத்தமிழர்களின் எந்த நெற்பயிர்ச் செய்கையை சிறிலங்கா படைபலத்தால் அழித்ததோ அந்த வயல்வெளிகளை மீளவும் உற்பத்திக்குள் கொண்டு வந்து படையினர்க்கு காணி வழங்கும் திட்டத்தையும் சிறிலங்கா தொடங்கியுள்ளது.
அவ்வாறே சீனாவின் கடலட்டை வளர்ச்சிக்குக் குடாநாட்டுப் பரவைக்கடல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பாசையூர் முதல் பூநகரி வரை களங்கட்டி/சிறகுவலை மீன்பிடி முறைமையினைச் சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் தடைசெய்துள்ளது. அதே வேளை பூநகரியை யாழ்குடாநாட்டு பல்கலைக்கழக நகரரக மாற்றுதல் என்ற திட்டத்தின் வழி பாரிய கட்டிடங்களை அமைக்கவென மண்ணை அகழ்ந்து தமிழர்களின் தொன்மைத் தலைநகரில் உள்ள அவர்களின் தொல்லியல் எச்சங்களை அழிப்பதற்கான முயற்சிகளும் திட்ட உருவாக்கமாகிக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் சிங்களப் பேராசிரியர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளேயே சாது சாது வென முழங்கி புத்தர் சிலை ஊர்வலம் நடக்கும் அளவுக்குச் சிங்கள பௌத்த விரிவாக்கம் இடம்பெற்றுள்ள நிலையில் ரணிலின் திட்டங்களின் உள்நோக்கு என்னவென்பதைச் சொல்லத் தேவையில்லை.
குருந்தூர் மலை தையிட்டி என விரிவுபெற்ற பௌத்த விகாரையின் பேரால் ஈழத்தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் திட்டம் கடந்த வாரத்தில் சுழிபுரம் பறாளாய் முருகன் கோயில் வரை நீண்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் வடமாகாணசபைத் தலைவர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று புத்தர் இலங்கைக்கு வந்து 700 ஆண்டுகளின் பின்னரே சிங்களவர் இலங்கை வந்தனர் என்ற வரலாற்று உண்மையை உரக்கச் சொல்லி இது குறித்துத் தொல்லியல் திணைக்களத்துடன் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் 1983ம் ஆண்டு யூலை ஈழத்தமிழின அழிப்புக்கு நேரடியாகத் தலைமை தாங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சரான சிறில் மத்தியூ 1970களில் எழுதிய ‘சிங்களர்களும் பௌத்தர்களும் எழுங்கள்’ என்ற மதவெறி இனவெறி மொழிவெறி நூலில் இலங்கைப்படத்தில் வடக்கு கிழக்கில் இருந்த பௌத்த விகாரங்களதும் பன்னசாலைகளதும் இடங்களென 231 இடங்களைக் குறித்து அவற்றை மீட்க வேண்டுமென வலியுறுத்தியதையே இன்று ஐக்கிய தேசியக்கட்சித் தலைவராகவும் சிறிலங்கா மொட்டுக்கட்சியின் பொம்மை அரசத்தலைவராகவும் உள்ள ரணில் 53 ஆண்டுகளின் பின்னர் அரசபயங்கரவாதத்தின் மூலம் நடைமுறைப்படுத்தி வருகின்றார்
மாவட்ட அமைச்சர்களை நியமித்து 1980களில் ஜே. ஆர். ஜயவர்த்தனா நடைமுறைப்படுத்திய மிக மிக மட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகப் பகிர்வையே இன்று ரணில் பொலிஸ் அதிகாரமற்ற மாகாணசபையென தனது மாமாவான ஜே. ஆரின் கனவை நனவாக்க முயல்கின்றார். இந்நிலையில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோ சமஸ்டிதான் எல்லாத் தமிழ்க்கட்சிகளதும் இறுதி இலக்காக உள்ளதென்றும் ஆனால் அதை அடையத் தங்களுக்குத் தெரியாத நிலையில் 13 வது திருத்தத்தை ஏற்று அதிலிருந்து கசியும் அதிகாரங்களையாவது பெற்று தப்பிப்பிழைக்க விரும்புவதாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையை அம்பலப்படுத்தியுள்ளார். 1977 மக்களாணையான இறைமையுடன் கூடிய தன்னாட்சியை வேறு எந்த வடிவிலும் மாற்றுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் மக்களாணையில்லை என்பதை இலக்கு நீதியரசர் அவர்களுக்கு எடுத்துக் கூறி, ரணில் அரசியலமைப்பின் 4ம் விதியின் படி மக்களே இறைமையாளர்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள் அதனை உறுதிப்படுத்துபவர்கள் என ரணில் கடந்த வாரத்தில் வலியுறுத்தியிருப்பதை மனதிருத்தி, ஈழத்தமிழரின் இறைமையாளரான நீங்கள் துப்பாக்கிகள மௌனித்த நிலையில் 1977 மக்களாணையான இறைமையுடன் கூடிய தன்னாட்சியை ஈழ மக்களின் அரசியல் தீர்வு என்பதால் அதனை அடைய சனநாயக வழிகளில் போராடுங்களென இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அவ்வாறே சம்பந்தர் ஐயா அவர்களும் இந்தியத் தூதரின் முழுமையான 13ம் திருத்ததத்தையே இந்தியா வலியுறுத்தும் என்ற இவ்வாரச் சந்திப்பு உறுதி மொழியுடன் 15ம் திகதி ரணிலின் அனைத்துக் கட்சி மாநாட்டுக்குப் போகையில் அதனை ரணில் ஏற்காமல் பொலிஸ் அதிகாரமற்ற மாகாணசபையையே புதிய அரசியலமைபில் சேர்ப்பார் என்பது உறுதியாகியுள்ள இந்நேரத்தில் நீங்கள் கடந்த சந்திப்பில் கூறியவாறு ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை உலகுக்கு வெளிப்படுத்தி உங்கள் தலைவர் தந்தை செல்வநாயகம் 1975இலேயே அதனைச் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் உலகிற்கு வெளிப்படுத்திச் சிறிலங்காப் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியது போலவே வெளியேறி ஈழத்தமிழர் இறைமையை இனியாவது காப்பாற்றுங்கள் என்பதே இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.

Tamil News