சிறுநீரக மோசடி தொடர்பில் மருத்துவமனை அறிக்கை

சிறுநீரக  மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என, சிறுநீரக மோசடி குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள, கொழும்பு- பொரளை பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம், குறித்த வைத்தியசாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீரகம் தொடர்பான சத்திர சிகிச்சைகளின்போது, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அந்த வைத்தியசாலையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த சிறுநீரக மோசடி தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட தரகர், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், குறித்த வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் உட்பட பணிப்பாளர்கள் ஆறு பேரும், நீதிமன்றின் அனுமதியின்றி, வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மோசடி வர்த்தகம் தொடர்பில், கொழும்பு குற்றவியல் பிரிவால் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.