பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாரஆளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகைமையற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்து தள்ளுபடி செய்தது.
“பாராளுமன்றத் தேர்தலின்போது ஆனந்த விஜேபாலவிடம் இத்தகைய தகைமையீனம் இருக்கவில்லை.
தேர்தல் முடிந்த பின்னரே அவர் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். எனவே, தேர்தலின்போது இருந்த தகுதியை அடிப்படையாகக் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தீர்மானிக்க முடியும்” எனக் கூறி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கு எதிராகவே, ரேணுக பெரேரா தரப்பால் உயர் நீதிமன்றத்தில்இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பரிசீலித்த உயர் நீதிமன்றம், தற்போது இந்த விவகாரத்தை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.



