சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்காது என்று அறிவிப்பு

போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டாலோ அல்லது கருத்துக்களை வெளியிட்டாலோ, அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் மூலம் மக்களின் மனங்களை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு கலாசாரம் வளர்ந்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 12 அல்லது 18 பேர் கொண்ட குழுக்களை வைத்துக்கொண்டு போராடுவதனால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் அல்லது தடையும் ஏற்படாது என்றும், விசாரணைகள் சரியான முறையில் முன்னோக்கி நகரும் என்றும் அவரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, “சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் எமது அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளைப் பாதுகாக்காது” என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

ஒருவர் எந்தத் தொழிலைப் புரிபவராக இருந்தாலும், அவர் குற்றமிழைத்திருந்தால், உரிய விசாரணைகளின் பிரகாரம் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.