இந்திய அமைதிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு இந்து சமய முறைப்படி அவர்களின் உறவினர்களால் நேற்று (23) இறுதிக் கிரியைகள் நிறைவேற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 1987ஆம் ஆண்டு கால பகுதியில் பெண்ணொருவரையும் அவரது மகனையும் சுட்டு படுகொலை செய்தனர். அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சி, அப்பெண்ணின் கணவன் தனது ஏனைய பிள்ளைகளின் உயிரை காப்பாற்றும் நோக்குடன், வீட்டின் வளவினுள் தனது மனைவி மற்றும் உயிரிழந்த பிள்ளையின் சடலங்களை புதைத்து, அதற்கு நடுகல் நாட்டியிருந்தார்.
அதன் பின்னர், சிறிது காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது ஏனைய பிள்ளைகளுடன் வெளிநாடொன்றுக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்கு வசித்துவந்தார். அதன்போது, தனது மனைவி, பிள்ளையின் சடலங்களை மீள எடுத்து, இந்து சமய முறைப்படி தகனக் கிரியை செய்ய வேண்டும் என தனது மற்றைய பிள்ளைகளிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் காலமான நிலையில், தமது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் முகமாக, யாழ்ப்பாணம் திரும்பிய அவரின் பிள்ளைகள், தமது தாய் மற்றும் சகோதரனின் சடலங்களை மீள தோண்டி எடுப்பதற்கு, நீதிமன்றத்தில் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தனர்.
அவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சடலங்களை தோண்டி எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
அதனையடுத்து, தாய் மற்றும் தமது சகோதரனின் எலும்புக் கூட்டு எச்சங்களை மீள தோண்டி எடுத்து, நேற்று (23) அவர்கள் இந்து சமய முறைப்படி இறுதிக் கிரியைகளை செய்துள்ளனர்.



