முழு அடைப்பு போராட்டம்- வடக்கு கிழக்கு ஆதரவு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (06.05) தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நாடு பூராகவும் முழு அடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அதடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், அரச தனியார் வங்கிகள் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. அரசு பேருந்து சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளன.
இதனால் நகர்ப்புறங்களில் பொது மக்களின் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது.
அதே நேரம் இப் போராட்டம் திருகோணமலை கிண்ணியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்க வங்கிகள், பிரதேச செயலகம், தபாலகம், விவசாய அபிவிருத்தி திணைக்களம்,பாடசாலைகள் உள்ளிட்ட அரசாங்க திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அரச சேவைகள் எதுவும் இடம் பெறாமை முடங்கியுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் இடம்பெறும் நிலையில், தனியார் பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை.
அத்துடன் இப்போராட்டத்தின் காரணமாக வவுனியாவில் பாடசாலைகள் இடம்பெறவில்லை.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி,ஏறாவூர், வாழைச்சேனை, கல்முனை ஆகிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அரச பாடசாலைகள், அரச அலுவலகங்கள் எதுவும் செயற்படவில்லை.
1953ம் ஆண்டு நடத்தப்பட்ட பெரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பின்னர் 69 வருடங்களைக்கடந்து இன்று நாடாளாவிய ரீதியில் மிகப்பெரிய முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.