20வது திருத்தத்தினால்  ஆபத்தா? – சுதந்திர ஊடக இயக்கம் விளக்கம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் 22 ஆம் திகதி ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தேச 20வது திருத்தம் காரணமாக ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என சுதந்திர ஊடக இயக்கம்  எச்சரித்துள்ளது.

“20வது திருத்த சட்டம் காரணமாகக் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள தகவலில்,

20வது திருத்தம் 19வது திருத்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக அம்சங்கள் மற்றும் கட்டமைப்புகளை நீக்குகின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்காலத்தில் சுயாதீனமாக விளங்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை ஜனாதிபதி நேரடியாக நியமிப்பதன் காரணமாக இந்தநிலை உருவாகியுள்ளது, இது கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்துக்கு எதிரான விடயம்.

ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதால் அவர்கள்   விசுவாசிகளாக் காணப்படுவார்கள். சுதந்திரமான தனிநபர்களாகக் காணப்படமாட்டார்கள்” எனக்குறிப்பிட்டுள்ளது

மேலும் ஜனாதிபதிக்கு அவர்களை நியமிப்பதற்கான, அகற்றுவதற்கான அதிகாரம் உள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துமா? சுயாதீனமற்ற ஆணைக்குழு தேர்தலின் போது ஊடகங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து ஊடகங்களுக்கான அளவுகோலை வெளியிடுமா எனவும்  சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் பொலிஸ் அதிகாரிகளின் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக காணப்பட்டால் பொதுமக்களின் கருத்துக்கான சுதந்திரம், கூட்டங்களை நடத்துவதற்கான- பயணிப்பதற்கான சுதந்திரம் போன்றவற்றிற்கான தடைகள் தவிர்க்க முடியாதவை எனவும் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம், செய்தி அறிக்கையிடலில் ஊடகங்கள் தடைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனநாயகத்திற்கானப் பாரதூரமான ஆபத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கான பாதிப்பு சுதந்திரம் குறித்து ஊடக சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என சுதந்திர இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.