ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிர்வினையாக, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை காவல்துறையினர், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர்.

மேலும், அவரை கைது செய்து  அழைத்துச் சென்றனர். இதையடுத்து காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மாஷா கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவர் கடந்த செப்டம்பர் 16-ம் திகதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.

இந்த போராட்டத்தில் இதுவரை 185 பேர் வரை பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் விவாதம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா கூறும்போது, “இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நேரம் இது. இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறைக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஏற்கெனவே ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.