இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்- அமெரிக்கா, கனடா கவலை

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம்  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கையில் மற்றொரு முறை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்.இலங்கையர்கள் தற்போது எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை மீண்டும் செழிப்பானதாக கட்டியெழுப்ப வேண்டும். அவசர காலச் சட்டங்கள் போன்றவை இதற்கு உதவாது என  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தெளிவான காரணங்கள் இன்றி அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை கவலையளிப்பதாக இலங்கைக்கான நியூஸிலாந்து தூதுவர் மைக்கல் அபிள்டன் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ளும் இலங்கையர்களின் குரல்களை கேட்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவரகாலச் சட்டம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க உதவாது என  ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாறாக எதிர்வினைகளையே ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

22 62763698da2a6 இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்- அமெரிக்கா, கனடா கவலை

தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாடான இலங்கையில், கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் கருத்து சுதந்திரத்தை வெளிக்காட்டுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Tamil News