தமிழரசு வெளியேறினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமடைந்துள்ளது : கூட்டில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செல்வம் அழைப்பு

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியை நாம் சந்தித்தபோது நிலங்களை சுவீகரிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, எடுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க செயற்படுமாறு  கோரினோம்.

அதேபோல் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். காணாமல் போனோர் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பிலும் பேசினோம்.

இவ்வாறான விடயங்களை உடனடியாக நிறைவேற்ற கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரையில் காலக்கெடு கொடுத்திருந்தும் இவை தொடர்பில் ஒன்றுமே நடைபெறவில்லை. இதனை நாம் ஜனாதிபதிக்கு நேற்று (நேற்று முன்தினம் ஜனவரி 10) தெரியப்படுத்தினோம். அப்போது அவர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும்போது நிலம் சம்பந்தமாக தான் சில தீர்மானங்களை எடுப்பதாக கூறினார்.

அத்தோடு அரசியல் யாப்பில் உள்ள அதிகார பரவலாக்கல் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அதிகாரங்களினூடாக எடுக்கப்பட்ட சட்டங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம். அப்போது பொலிஸ் நில அதிகாரங்கள் சம்பந்தமாகவும் அங்கே முணுமுணுக்கப்பட்டது.

ஜனாதிபதி எதிர்வரும் 4ஆம் திகதி தீர்வினை வழங்குவதாக கூறியுள்ளார்.

எனினும், எதுவும் நடைபெறாமல், மேசைகளின் முன்னால் மாத்திரமே பேசிவிட்டுப் போகும் நிலைதான் காணப்படுகிறது. ஆகவே, நாங்கள் கூறிய விடயங்களில் எதை செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவதா, இல்லையா என்பதை தீர்மானிக்கிறோம் என தெரிவித்தோம்.

அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களை கூட நடைமுறைப்படுத்த முடியாதவர்கள், எப்படி இனப் பிரச்சினையை தீர்ப்பார்கள்? நாங்கள் போயிருக்காவிட்டால், தாம் பல விடயங்களை செய்யவிருந்தபோது, நாம் சந்திப்பில் இணைந்துகொள்ளவில்லை, தமிழ் தரப்பு வரவில்லை என்றிருப்பர். அதற்காகவே பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.

அவர்கள் நல்லிணக்க சமிக்ஞையை காட்ட வேண்டும். எனவே, நாம் கூறிய விடயங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைப் பொறுத்தே அடுத்த பேச்சுக்கு செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித் தனியாக பிரிந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது எப்படியென உங்களுக்கு தெரியும். இறுதியாக, மூன்று கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து பயணித்தன. நானும் சித்தார்த்தன் அவர்களும் கட்சி ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு கடிதம் எழுதினோம். ஏனைய கட்சிகளையும் அரவணைத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக எமது வலுவான ஒற்றுமையை காண்பிக்க முடியும்; மக்களது அபிலாசைகளையும் வென்றெடுக்க முடியும்.

நாங்கள் ஆறு கட்சிகளும் இணைந்து ஐ.நா சபைக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினோம். அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு ஏனைய தேசிய கட்சிகளையும் உள்ளெடுப்பது தொடர்பாக சம்பந்தன் ஐயாவுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால், அவரிடமிருந்து பதில் வருவதற்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற முடிவை எடுத்திருந்தார்கள்.

எமது கோரிக்கைக்கு பதில் தராமல், இந்த முடிவை எடுத்து, நாம் வெளியே செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில், உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது அணி திரண்டுள்ளோம்.  குறிப்பாக, இந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் எமது கூட்டில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை வென்றெடுக்க நாங்கள் பலமான கூட்டாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கூட்டில் வந்திணைய வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். எனவே, கூட்டு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதேயாகும். அதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பங்களிப்பும் இருக்கும். தனிப்பட்ட கட்சிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுக்கொடுக்க முடியாது.

மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தனித்து செல்ல தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது.  ஆனால், மட்டக்களப்பு மாவட்ட பத்திரிகையாளர்கள் இந்த கூட்டமைப்பு உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடும்.

தேர்தல் தொடர்பில் எங்களது கடிதத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவு கவலையளிக்கிறது. அவர்கள் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனினும், மக்கள் ஒற்றுமையைத் தான் விரும்புகிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும், முன்னர் விலகிச் சென்றவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். அதனடிப்படையில் மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள். கூட்டமைப்பு சிதைவுபட மாட்டாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள்.

தற்போது தேர்தலொன்று வந்துள்ளது. தேர்தல் தான் எங்களது குறிக்கோள் அல்ல. இந்த தேர்தல் முடிந்த பின் சட்ட ரீதியாக பதிவுசெய்யப்பட்ட கட்டமைப்பை உருவாக்குகின்ற, தொடர்ச்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற, மக்களது ஆலோசனைகளை பெறுகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

தனிப்பட்ட கட்சிகளின் விருப்பு – வெறுப்பு இங்கிருக்காது. இது ஒரு கூட்டு. அத்துடன் சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். மக்களின் நம்பிக்கைகேற்ப நாம் பிளவுபடாமல், மக்கள் நலனை முன்னிறுத்தி, கட்டுக்கோப்பாக செயற்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படும். பொதுச்சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொதுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.