இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி, காங்கேசன்துறை தொகுதிக்கிளை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதில், 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது வலிவடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், சில வேட்பாளர்கள் ஏமாற்றப்பட்டு போலிக் கையொப்பங்களும் இடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை நேரிலும், எழுத்து மூலமாகவும் கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், எந்தவித விசாரணையோ நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



