சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பது தாமதமாவதால் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன – செஹான்

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சர்வதேச நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற நிதிஉதவியை பெற்றுக்கொள்வது தாமதமாவதன் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தனிநபர்களையும் வர்த்தகங்களையும் பாதிக்கின்றது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு உதவி வழங்கும் சகாக்களின் உதவியை பெறுவது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எனினும் தொழில்நுட்ப விடயங்கள் குறித்த கரிசனை காரணமாக காணப்படும் நிச்சயமற்ற தன்மையும் முக்கிய அனுமதி கிடைப்பது தாமதமாவதும் மக்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், எனினும் இரு தரப்பு கடன்வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்கள் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.