லொஹான் ரத்வத்தையிடம் சி.ஐ.டி. விசாரணை

லொஹான் ரத்வத்தை
வெலிக்கடை மற்றும் அநுராதபுர சிறைச்சா லைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத்துறை (சி.ஐ.டி) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சி.சி.ரி.வி காட்சிகள் மற்றும் சம்பவங்களை நேரில் பார்த்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆதாரங்களை சி.ஐ.டி சேகரித்து வருவதாக அவர் கூறினார். “நியாயமான விசாரணை நடத்தப்படுவதை யும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் உறுதியளித்தார்.

இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வெளிநாட்டு பயணத்திலிருந்து நாடு திரும்பும்வரை காத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கூறினார்.

“இந்த வகையான நடவடிக்கை எந்த நாகரிக சமுதாயத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது. விசாரணைகளுக்குப் பிறகு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் விலகிய ரத்வத்த, இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சராக நீடிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளும் கூட்டணியின் மற்ற அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், அரசாங்கம் முழு பொலிஸ் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறது என்றார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கைதிகளை பாதுகாக்கும் குழு ஆகியவை சி.ஐ.டி.யிடம் புகார் அளித்துள்ளன.

செப்டெம்பர் 12 அன்று இரவு அநுராதபுரம் சிறைக்குள் நுழைந்த லொஹான் ரத்வத்தை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் எட்டு பேரை அழைத்து அவர்களில் இருவரை துப்பாக்கியை நீட்டி மிரட்டியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், ஹட்டனை சேர்ந்த கணேசன் தர்ஷன் ஆகியோரே மிரட்டப்பட்டதாக அடையாளம் காணப்பட்டனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021