செம்மணி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு- பலர் கைது

செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பன இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த
தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

‘சந்தேக நபர், நபர் ஒருவரை வெட்டி படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அத்தோடு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பனவும் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவை நீதிமன்றின் உத்தரவில் மீட்கப்படவேண்டும்’ என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

image2 செம்மணி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு- பலர் கைது

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிணை விண்ணப்பத்தை முன்வைத்தனர்.இருதரப்பு விண்ணப்பத்தையும் ஆராய்ந்த மன்று, சந்தேக நபரை வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்தே செம்மணி பகுதியில் மேற்படி வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டதுடன் மேலும் 6 சந்தேக நபர்கள் பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.