மட்டக்களப்பில் களுவாஞ்சிக்குடியில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று  சனிக்கிழமை காலை கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இக்கூட்டத்தில் கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக  நிருவாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக்கட்சியின் தலைவரினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மத்தியகுழு கூட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் இதில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.