அடுத்த 3 ஆண்டுகளில் குடியேற்ற வாசிகளை நாட்டுக்குள் அனுமதிக்க திட்டம்- கனடா அறிவிப்பு

சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான குடியேற்ற வாசிகளை, அடுத்து வரும் 3 ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த கனேடிய மத்திய குடியேற்ற அமைச்சர் மார்கோ மென்டிசினோ,

“கோவிட்-19 தொற்று நோயால் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பவும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ஏதுவாக புதிய குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் வரவேற்கவுள்ளோம். கனடாவுக்கு அதிகமான தொழிலாளர்கள் தேவை. குடியேற்றமே அதனை நிரப்ப ஒரே வழி.

தொற்றுநோய்க்கு முன்னரும் குடியேற்றத்தின் மூலம் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதே எங்கள் அரசாங்கத்தின் குறிக்கோளாக இருந்தது. தொற்று நோயின் நெருக்கடியால் இது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.” என்றார்.

கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கனடா தனது எல்லைகளை மூடியது. இதனால் நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருவோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 128,425 புலம்பெயர்ந்தவர்களே  கனடடாவுக்குள் சென்றுள்ளனர்.

இந்நிலையில்,இவ்வாண்டு 341,000 வரவேற்க கனடா நிர்ணயித்திருந்த இலக்கில் பாதிக்கும் குறைவானதே இதுவரை நிரப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக புலம்பெயர்ந்தோர் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களைச் செலுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனடாவுக்குள் வரும் குடியேற்றவாசிகளே அதிகளவான கடினமான வேலைகளை ஏற்றுக்கொள்பவர்களாக உள்ளனர். கனடாவில் சுத்திகரிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயம் போன்ற பல முக்கிய தொழில்கள் அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்களையே நம்பியுள்ளன.

இந்நிலையில் இவ்வாறான தொழில்களில் ஏற்கனவே இருக்கும் பல ஆயிரக்கணக்கானோருக்கு கனடா நிரந்தர உரிமையை விரைவாக வழங்குமாறு கடந்த பல மாதங்களாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தொழிலாளர்கள் கொரோனா தொற்று அபாயத்தில் மத்தியிலும் கடினமாக உழைப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த அழுத்தங்களின் மத்தியில் இந்த ஆண்டு சுகாதார துறைசார் பணியாளர்களுக்கு நிரந்தர விதிவிட உரிமையை வழங்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் எங்கள் சுகாதாரத் துறைக்கு முக்கியமானவர்கள். எங்கள் மருத்துவமனைகள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணிபுரியும் நான்கில் ஒருவர் புலம்பெயர்ந்தவா்களாகவே உள்ளனர்.

ஆனால் அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் நிரந்தர வதிவிட உரிமையை வழங்கும் உறுதிமொழியை கனடா வழங்க வேண்டும் என புலம்பெயர்ந்த தொழிலாளர் கூட்டணியின் வழக்கறிஞர் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டில் 401,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும் 2022 ஆம் ஆண்டில் 411,000 பேரையும் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் 421,000 பேரையும் ஏற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.

கொரோனா காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கனடாவில் பலியாகியுள்ளனர். அதே நேரம் 232,000 -க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.