வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு: வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு  எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நெடுங்கேணி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தின் ஏற்பாட்டு குழு சார்பாக இன்று தணிகாசலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா,  மூன்று இனமக்களும் நீண்டகாலமாக வாழுகின்ற ஒரு மாவட்டம். எமது மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதனூடாக இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடு கடந்த காலங்களில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். 2010ம் ஆண்டு வரை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு வவுனியா வடக்கு பிரதேச சபையின் அதிகார பிரதேசமாக இருந்தது. அதன் பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஒரு பகுதி அனுராதபுர மாவட்டத்தின் கெப்பிட்டிகொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் நடைபெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஒரு பகுதியான கொக்கச்சான்குளம் 1983ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களக்குடியேற்றம் செய்யப்பட்டு வவுனியா தெற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையுடனும் இணைக்கப்பட்டது.

மகிந்த ஆட்சிகாலத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கிழக்கு எல்லைப் பிரதேசத்தில் இலங்கையின் தென்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் பூர்வீக மக்களது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ் மக்கள் மட்டுமே வாழ்ந்துவந்த வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 361 குடும்பங்களை சேர்ந்த 1169 சிங்கள மக்கள் வாழ்ந்துவருவதுடன் 26 உறுப்பினர்களை கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் 10 சிங்கள உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2014ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட மணலாறு பிரதேச செயலாளர் பிரிவின் (வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு) நிர்வாகத்தினுள் இருந்த 5 கிராம அலுவலர் பிரிவுகள் (4உள்ளூராட்சி மன்ற வட்டாரங்கள்) கஜபாபுர, அத்தாவெட்டுனுவெவ, நிக்கவெவ, மொனராவெவ, கல்யாணபுரவின் ஒரு பகுதி ஆகியன வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டன. இருந்தபோதிலும் இன்றுவரை இப்பகுதிகள் முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தினாலேயே நிர்வகிக்கப்படுகிறது.

இன்று எமது பாரம்பரிய பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் அதேவேளை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான வேலைத்திட்டமானது பங்குனி மாதம் 2021ம் ஆண்டு ஜனாதிபதியின் கொக்கச்சான்குள (போகஸ்வெவ) விஜயத்தின் பின்னர் எந்தவித கலந்துரையாடலுமின்றி பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படுகிறது.

அனுராதபுர மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பதவியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கனகாவெவ ( 430 குடும்பங்கள்) மற்றும் கொரவப்பத்தான பிரதேச செயலாளர் பிரிவின் வெரகதென்ன, கம்பிலிவெவ ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளை (600 குடும்பங்கள்) வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுள் உள்வாங்குதற்கான ஏற்பாடுகளை விரைவாக செயற்படுத்தி வருகின்றனர். இச்செயற்பாடானது மேலும் இனவிகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை மிகத்துரித கதியில் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே நோக்க வேண்டியுள்ளது.

யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கச்சல் சமளன்குளம் என்கின்ற குளத்தையும் அதற்கு மிக அருகில் இருந்த கைவிடப்பட்ட இன்னோர் குளத்தையும் இணைத்து பாரிய குளமாகமாற்றி நீர்பாசன காணிகளை 2 ஏக்கர் வீதம் பிரித்து நூற்றிற்கு மேற்பட்ட தென்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது, எமது எதிர்ப்பினால் அச்செயற்பாடு கைவிடப்பட்டிருந்தாலும் தற்போது விவசாயக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு குடியேற்றம் நடைபெற்றுள்ளது. இக்குளத்தை புனரமைக்கும் செயற்பாட்டை வவுனியா அரசாங்க அதிபருக்கோ கமநலசேயை திணைக்களத்திற்கோ தெரியாமல் அனுராதபுர மாவட்ட கமநலசேவை திணைக்களமே கையாண்டது குறிப்பிடப்பட்டது.

எமது நிலம்  எம்மிடமிருந்து  பறிக்கப்படுவதை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று வவுனியாவை பூர்வீகமாக கொண்ட பலரும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவில் நிரந்தரமாக வசித்துவரும் பலரும் குறிப்பாக பல புதிய குடும்பங்கள் காணியில்லாமல் உள்ள நிலையில் எமது மாகாணத்தை சாராத வேறுமொழி பேசுகின்றவர்களை குடியேற்றுவதனூடாக மாவட்ட இனவிகிதாசாரத்தை மாற்ற எடுத்துவரும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு அச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்றவை அடாத்தாக எமது மக்களின் பூர்வீகநிலத்தை தொடர்சியாக அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதோடு  வேறு மாகாணக் கிராமங்களை எமது மாவட்டத்துடன் இணைத்து எமது அடையாளத்தை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

எனவே இனப்பரம்பலை மாற்றும் அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தும் உரம் மற்றும் களைநாசினிகள் இன்மை, ஆசிரியர்களின் சம்பளமுரண்பாடு தீர்க்கப்படாமை அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு , விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்தும், எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நெடுங்கேணி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும்  கலந்துகொள்ள வேண்டும்” என  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

COP-26 சூழல் பாதுகாப்பு மாநாடும் தமிழர்களும் – வேல் தர்மா

பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை

புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு