தமிழர் பகுதிகளில் பௌத்த சின்னங்கள் -தொல்லியல்துறையின் கருத்துக்கு வரலாற்று ஆசிரியர் பதில்

வெடுக்குநாறிமலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால்

வெடுக்குநாறிமலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக பார்ப்பது மிகவும் தவறானது என யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை  மூத்த பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் (P.Pushparatnam) தெரிவித்துள்ளார்.

பௌத்த விகாரையின் சிதைவுகளே வெடுக்கு நாறிமலையில் உள்ளது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து  யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை  மூத்த பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்  அவர்கள்  இலக்கு ஊடகத்திற்கு  கருத்து தெரிவிக்கையில்,

“ஆதியிலே பௌத்தம் என்பது தமிழர்களுக்குமுரிய ஒரு பண்பாட்டு சின்னமாக  காணப்பட்டது. ஆகவே இந்த வன்னி பிராந்தியத்தில் வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக பார்ப்பது மிகவும் தவறானது. ஏனென்றால் இந்த பௌத்த மதம் இலங்கையில் மட்டுமல்லாமல் உலகிலே பல நாடுகளில் பல இனம் , பல மொழி பேசுகின்ற மக்களிடையே பரவியதுண்டு.

எனவே வெடுக்குநாறி மலையில் ஆதியிலே இந்துமதம் இருந்து பின்னர்  கணிசமான மக்கள் பௌத்தர்களாக மாறினர். ஆகவே வன்னி பிராந்தியத்தில் தமிழ் பௌத்தமும் இருந்திருக்கலாம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் பௌத்த சின்னங்களை வைத்துக்கொண்டு அது சிங்கள மக்களுக்குரியதென்றும், அதனாலே குறித்த இடங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் எனக் கூறுவது பொருத்தமற்றது.   இது இலங்கையிலுள்ள பல அறிஞர்களதும் பொதுவானகருத்து.

பௌத்த சிங்கள மக்கள் வாழாத இடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானல் அந்த இடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழரோடு தொடர்புபடுத்தி தான் அதனை பார்க்க வேண்டும்.

பௌத்த  சின்னங்களை ஒரு வழிபாட்டுக்குரிய இடங்களாக மாற்றுவது பொருத்தமில்லை. மாறாக முன்பொரு காலத்தில் வன்னியிலே பௌத்த மதமும் இருந்ததென்ற ஒரு அடையாளமாக அதனை பாதுகாக்கலாமே தவிர அதனை ஒரு வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றுவது இன நல்லுறவை பாதிக்கின்ற ஒரு செயலாக தான் இருக்குமென்பது என்னுடைய  கருத்து என்றார்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad  தமிழர் பகுதிகளில் பௌத்த சின்னங்கள் -தொல்லியல்துறையின் கருத்துக்கு வரலாற்று ஆசிரியர் பதில்