பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது தொடர்பில் பிரித்தானிய எம்.பி. கண்டனம்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளதை  பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டித்துள்ளார்.

தமிழர்களிற்கான அனைத்து கட்சிபாராளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை நான் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய அட்டுழியங்கள் இனப்படுகொலைகளிற்கான நீதி  மற்றும்  இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குரல்கொடுக்கும் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த கைது அச்சம் தரும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்  சியோபன் மெக்டொனாக்கும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.