உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணைகளிற்கு உதவ தயார் என பிரிட்டன் கருத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார்.

விசாரணைகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் -அந்த வேண்டுகோள் பொருத்தமானதாக சட்டபூர்வமானதாக அவசியமானதாக காணப்பட்டால் அதனை பரிசீலிக்க தயார் என பொதுச்சபைக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரிட்டிஸ் பிரஜைகளிற்கு உதவுவதற்காகவும் கொல்லப்பட்ட பிரிட்டிஸ் பிரஜைகளின் உடல்களை அனுப்புவதற்கு உதவுவதற்காகவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவு தனது நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் உதவுவதற்காக மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் இன்னமும் எவரையும் நியமிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உரிய விசாரணைகள் இடம்பெறாததால் இந்த விடயத்திற்கு இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை என கடந்த ஜூலையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

மேலும் விசாரணைகள் பூர்த்தியடையாததால் நான் பிரிட்டனின் உதவியை நாடுவேன் என ரணில் அவ்வேளை தெரிவித்திருந்தார்.