சமூக விலகல்,முகக்கவசம் அவசியமில்லை என கூறிவந்த பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா

பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர்.

மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஜனாதிபதி போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததால் தற்போது முகக்கவசம் அணிகிறார்.

இந்நிலையில் போல்சோனாரோ கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது. வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டார். வெளியில் வரும்போது என்னுடைய நுரையீரல் சுத்தமாக உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. என்றாலும் அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும், அவர் சிறப்பாக இருப்பதாக உணர்வதாகவும் ஜனாதிபதிமாளிகை தெரிவித்துள்ளது.