இலங்கையில் திருமண நிகழ்வுகளுக்கு தடை!

இலங்கையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாளை மறுதினம் நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல், வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என கோவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், இன்று ஞாயிறு நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார். கொவிட்-19 பரவலைக் கட்டுப் படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதேநேரம், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோர் ஒன்றுகூட முடியாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை, பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் அரசாங்கம் கோருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021