சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சாவகச்சேரி- நாவற்குழி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் சொல்லிசையை அவர் பகிர்ந்திருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கடந்த 2ஆம் திகதி அவரை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்படி, அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினம் (11) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில் சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது, தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு பணித்திருந்தார்.

அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து அவர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.