போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்  – சஜித் கண்டனம்- தாக்குதலுக்கு எதிராக போராட்டம்

அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அனைத்தும் தற்போது பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் காவல்துறை, இராணுவத்தினர் சகிதம் வீதித் தடைகளை நிறுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர், அந்தப் பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொது அமைதியை பாதுகாக்க ஆயுதப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.