வவுனியாவில் மேலும் 146 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனாத் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப் படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதே நேரம், திருகோணமலை நகரம் முற்றாக முடங்கியது.கொரோனாத் தொற்றினை தடுக்கும் வகையில் இன்று திருகோணமலை நகரம் முற்றாக முடங்கி யுள்ளது.
திருகோணமலை வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க மரக்கறி சந்தை, மீன் சந்தை மற்றும் தனியார் கடைகளை இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.
திருகோணமலையில் வேகமாகப் பரவி வரும் கொரோனாத் தொற்றினை தடுத்து மக்களை பாதுகாக்கும் வகையிலேயே மேற்படி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளன, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.