தீவிரவாத எதிர்ப்புக்கென ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் வழங்குகிறது.

தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் தொடர்பில் கிரமமாக ஒதுக்கப்படும் நிதியிலேயே இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ, அதாவது சுமார் 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டிற்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதன் ஊடாக அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இந்நிதியுதவியின் மூலம் பங்களிப்பு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உபதலைவருமான பெடெரிகா மொகெரினி பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும், ஒழிப்பதற்கும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவை வழங்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையிலேயே தற்போது இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது