மாவீரர்களை நினைவு கூர்ந்தால் மன ஆறுதலாவது கிடைக்கும். ஆனால் இந்த அரசு தடை விதிப்பதால் மனவிரக்தியில் இருக்கிறோ ம் என முல்லைத்தீவிலுள்ள மாவீரர் ஒருவரின் பெற்றோர் இலக்கு ஊடகத்திற்கு தெரிவித்தனர்.
தமிழர்களின் விடிவு வேண்டி அவர்களின் உரிமைக்காகவும், நில மீட்புக்காகவும் போராடி தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் தான் மாவீரர்கள். இவர்களை நாம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ம் திகதி நினைவு கூர்ந்து வருகின்றோம். எனினும் தற்போது மாவீரர்களை நினைவு கூர்வது குற்றம் போலவே தடை செய்யப்பட்டிருக்கின்றது.
இதனால் மாவீரர்களின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை, குறித்த நாளில் நினைவுகூர முடியாமல் மன வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில், முல்லைத்தீவில் வசித்து வரும் மாவீரர் ஒருவரின் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,“கடந்த மைத்திரிபால ஆட்சிக் காலத்தில் சட்டங்கள் சற்று தளர்த்தப்பட்டது போல மாவீரர் நாளை நினைவுகூரலாம் என கொஞ்சம் அனுமதித்தார்கள். நாங்களும் எவ்வித தயக்கமுமின்றி மாவீரர் நினைவேந்தல்களை செய்து வந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த நிலையை மாற்றியுள்ளது.
மாவீரர் நாளை நினைவேந்தல் செய்ய முன்னரே, நீதிமன்றத்தினால் தடையுத்தரவுகளை வழங்குவதும், மாவீரர் நாளை கடைப்பிடித்தால் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுவதும், விசாரணை என்ற பெயரில் அத்துமீறி கைது செய்வதுமாக காவல்துறையினர் இருக்கின்றார்கள். இதனால் இன்னமும் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது வெறுப்பும் அச்சமுமே மிகுந்துள்ளது” என்றார்.