45 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மீது அரசு எவ்வித கவனமும் கொள்ளவில்லை-மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்
45 வயதைத் தாண்டி பட்டதாரிகள் மீது இந்த அரசு எவ்வித கவனமும் கொள்ளவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
“குறைந்த கல்வித் தகமைகளைக் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக புதிய புதிய நிகழ்ச்சித் திட்டங்களுடாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்னும் செயற்திட்டங்களை உருவாக்கும் அரசாங்கம், 45 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில் தாமதத்தைக் காட்டுகின்றது.
அரசாங்கத்தினால் அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தும் சுமார் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு பட்டதாரிகளுக்கு மாத்திரமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக 45 வயதைத் தாண்டிய பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் 45 வயதைத் தாண்டிய பின்னர் பட்டம் முடித்தவர்கள் அல்ல. 45 வயதுக்கு முன்னரே பட்டம் முடித்தவர்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதை அரசு இன்னமும் தாமதப்படுத்தி வருகின்றது என குற்றம் சுமத்தியுள்ளனர்.