அமெரிக்க ஆப்ரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டை 2020ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்த குற்றத்தில் அமெரிக்கவை சேர்ந்த வெள்ளை இன முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதியன்று, மின்னியாபோலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க காவல் துறையினர் முயன்றுள்ளனர்.
காவலர் அவரை நெருங்கியபோது ஜார்ஜ் ஃப்ளாய்ட் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.
மேலும் 48 வயது ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மீது, டெரெக் சாவின் என்ற வெள்ளை இன காவல்துறை அதிகாரி முட்டியை மடக்கி அழுத்தி 9 நிமிடங்கள் மூச்சு விடாமல் செய்ததில் அவர் உயிரிழந்தார்.
ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இனவெறி மற்றும் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.