கம்மன்பிலவின் கதியை நினைத்து கவலைப்பட எதுவும் இல்லை – மனோ கணேசன் சொல்கிறார்

“அமைச்சர் உதய கம்மன்பிலவின் கதியை நினைத்து கவலைப்பட ஏதுமில்லை” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சர் உதய கம்பன்பில எரிபொருள் விலையேற்றத்துக்குபப பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என ஆளும் பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்திருப்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனை மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதவின் விபரம்:

“மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் (கம்மன்பில) ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்..?

பொதுஜன பெரமுன (SLPP) என்ற ஆளும் கட்சி..!
திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது,

தமிழ் சினிமா சிரிப்பு நடிகர்களின் “நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதே, ப்ரதர்” என்ற பிரபல சந்தேக வசனம் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறதே..!

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு பொறுப்பேற்று ஜனாதிபதியல்லவா ராஜினாமா செய்யவேண்டும்..!
கம்மன்பில யார்?

அரசில் உள்ள சிறுகட்சி அமைச்சர். இது ஏதோ வீடு தீப்பற்றியதற்கு, வீட்டில் வளர்க்கும் கூண்டுக்கிளியை பலிகடா ஆக்குவதாக தெரியுது..!

ஆனாலும், காலமெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கி வந்த கம்மன்பிலவின் கதியை நினைத்து கவலைப்பட ஏதுமில்லை..!

இதற்கு முன்னால் அரசு தலைமையின் கோபத்துக்கு ஆளாகி வாயை மூடிக்கொண்டு இருக்கும் வீரவன்ச கதியே இன்று இவருக்கு..!

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.