கம்மன்பில பதவி விலகவேண்டும் – எரிபொருள் விலையேற்றத்தையடுத்து அரசுக்குள் குழப்பம்

எரிபொருட்களின் திடீர் விலையேற்றத்தையடுத்து ஆளும் பொது ஜன பெரமுனவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதற்குப் பொறுப்பேற்று விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் என பொதுஜன பொதுஜன உத்தியோகபூர்வமாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.

நாட்டு மக்கள் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் உள்ள நிலையில் இந்த விலையேற்றத்துக்குப் பொறுப்பேற்று இதற்குப் பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவாசத்தின் கையொப்பத்துடன் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

நாட்டு மக்கள் கொரோனா நெருக்கடிக்கு முகங்கொடுத்துக்கொண்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதை நோக்கமாகக்கொண்டிருந்ததா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் பொது ஜன பெரமுனவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் உதய கம்பன்பில இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் என இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

எரிபொருட்களின் திடீர் விலையேற்றத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன கடுமையாக விமர்சித்திருக்கும் நிலையில், ஆளும் கூட்டணிக்குள்ளும் இந்த விவகாரம் ஒரு புயலைக் கிளப்பியிருப்பதைத்தான் பொது ஜன பெரமுன சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வெளிப்படுத்துகின்றது.