யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம்

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம சேவையாளர் பிரிவுகளில் இன்று முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் போடப்படும்.

தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பவதி தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கு அந்தப் பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மக்கள் தம்மை பதிவு செய்துள்ள கிராம சேவகர் பிரிவு தவிர்ந்த வேறு பிரிவுகளில் தடுப்பூசியை பெறமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறித்த தினத்தில் தடுப்பூசியை பெறத்தவறுபவர்கள் பிறிதொரு தினத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் – என்றும் அவர் தெரிவித்தார்.