நடைப்பயிற்சிக்காக வீதிக்கு வந்த அதிகாரியின் மனைவி; தடுத்த பொலிஸாருக்கு இடமாற்றம்

பயணத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி வீதியில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் கொழும்பில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றுள்ளது.

மருதானையில் உள்ள பொலிஸ்சோதனைசாவடியில் பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் மேலதிகாரியின் மனைவி நடைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிமறுத்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

மருதானை ஆனந்தா கல்லூரி சந்தியில் பொரளை மருதானை வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த மருதானை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார். தனதுவீட்டிலிருந்து பயணத் தடைநடைமுறையில் உள்ள வேளையில் நடைப் பயிற்சிக்காக செல்ல முயன்ற பெண்ணையே அவர் தடுத்துநிறுத்தியுள்ளார்.

உடனடியாக அந்த பொலிஸ்உத்தியோகத்தரை பார்த்துசத்தமிட்ட பெண் தான் உயர் அதிகாரியின் மனைவி என தெரிவித்துள்ளார். எனினும், “சட்டத்தின் முன்அனைவரும் சமம்” என தெரிவித்த அந்த பொலிஸ் உத்தியோகத்தர், அவரை திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது கையடக்க தொலைபேசியில் தனது கணவரை அழைத்த பெண் நிலைமை தெரிவித்துடன் பொலிஸ் உத்தியோகத்தரை நோக்கி சத்தமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தரிடம், அந்த அதிகாரி குறிப்பிட்ட பெண் தனது மனைவி என தெரிவித்ததுடன், அவரை நடைபயிற்சியில் ஈடுபட அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருப்பதை சுட்டிக்காட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஏனையவர்களும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டால் என்ன நடைபெறும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை அந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உத்தரவை மீறி நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது இடம்பெற்று சில நிமிடங்களில் புஞ்சிபொரளையில் உள்ள சோதனைசாவடிக்கு பணிக்குவருமாறு அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டது.

எனினும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளிடம் இந்த விடயத்தை தெரிவித்து தமது எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மீண்டும் பழைய இடததிற்கே கடமைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.