சாட் நாட்டின் அதிபர் மோதலில் சிக்கி உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு

மத்திய ஆபிரிக்கக் குடியரசான சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி(Idriss Déby) ஆயுத மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக  அந்நாட்டின் இராணுவம் அறிவித்திருக்கிறது.

பிரான்ஸின் பாதுகாப்பு கூட்டணி நாடான சாட், சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பிரெஞ்சுப் படைகளது தலைமையகமாக உள்ளது.

68 வயதான டெபி சாதாரண படைச் சிப்பாயாக இருந்து 1990 இல் ஆயுதக் கிளர்ச்சி மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர். ஆபிரிக்காவில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்கும் அதிபர்களில் ஒருவரான இட்ரிஸ் டெபி, லிபியா எல்லையோரம் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்து பின்னர் உயிரிழந்தார் என்று அவரது மகனின் தலைமையில் இயங்குகின்ற இராணுவம் தெரிவித்துள்ளது.

சாட்டில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்னேறி வருகின்ற ‘வெற்றிக்கும் மாற்றத்துக்கான முன்னணி’ (Front for Change and Concord in Chad) என்ற கிளர்ச்சியாளர்களுடன் நாட்டின் இராணுவம் சண்டையிட்டு வருகிறது.

லிபியாவில் செயற்படுகின்ற கிளர்ச்சியாளர் குழு ஒன்றுக்கு எதிரான படை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சமயத்திலேயே அதிபர் காயமடைநத்தார் என்று கூறப்படுகிறது.

சுயாதீன தரப்புகள் இன்னமும் இத்தகவலை ஊர்ஜிதம் செய்யவில்லை. நாட்டின் அரசமைப்பு இடைநிறுத்தப்பட்டு, தற்காலிக இராணுவ சபை ஒன்று நிர்வாகரத்தைப் பொறுப்பேற்றுள்ளது.

அடுத்த18 மாத காலத்துக்கு இராணுவ நிர்வாகம் நீடிக்கும் என்றும் நாட்டின் இடைக்காலத் தலைவராக இட்றிஸ் டெபியின் புதல்வர் ஜெனரல் மஹமட் காகா (General Mahamat Kaka) பதவி வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டின் அரசமைப்பின்படி அதிபர் உயிரிழந்தால் சபாநாயகரே இடைக்கால நிர்வாகத்துக்குப் பொறுப்பாவார். சுமார் முப்பது ஆண்டுகள் சாட் நாடைத் தனது அதிகாரத்தின் பிடியில் வைத்திருக்கின்ற அதிபர் இட்ரிஸ் டெபி, அண்மையில் நடந்த தேர்தலில் ஆறாவது பதவிக்காலத்துக்கு அதிபராகத் தெரிவாகி இருந்தார். தனது வெற்றி உரையை ஆற்றவிருந்த சமயத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார்.

பிராந்தியத்தில் இராணுவச் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய இட்றிஸ் டெபியின் திடீர் மறைவு G5 Sahel என்ற ஆபிரிக்கப் பாதுகாப்புக் கூட்டணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.