தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி – பகுதி – 1

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள். பிறந்தநாள் நினைவாக எமது மின்னிதழில் வெளியாகிய கட்டுரையின் முதல் பகுதி

புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து – வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும்.

புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்ற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல.

இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் இந்த சமுதாயத்தை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் சிலர் மட்டுமே.

ஜோதிபா புலே அவர்கள் தொடக்கி வைத்த புரட்சியை, சரியான பார்வையை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்கள்தான் எடுத்துச் சென்றார்கள். மற்றவர்கள் எல்லாம் இருந்ததை மெல்ல சீர்திருத்தி, கொஞ்சம் மாற்றி, அதற்கு புதிய வண்ணத்தை பூசிவிட்டு செல்வதாக இருந்த காலத்தில், அடிப்படையையே மாற்றியாக வேண்டும் என்று எண்ணிய தலைவர், அதற்காக தனது முழு அறிவை, உழைப்பை எல்லாவற்றையும் பயன்படுத்திய தலைவர், தத்துவத் துறையில் ஆய்வு செய்யப் போனவர்,

ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதுகிறார். இந்திய சாதியினுடைய தோற்றம், அதன் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வுசெய்து மாந்தவியல் துறையில் அந்த அறிக்கையை தருகிறார். இந்தியாவில் ஜாதி என்பது, அவருடைய இருபத்தி ஐந்தாம் வயதில், அவர் ஆற்றிய ஆய்வுரை. இன்றைக்கு வரைக்கும் எல்லா விதத்திலும் அதை நாம் புரட்டிப் பார்க்கிற பொழுது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றப்பட்ட உரை. இந்த சமுதாயத்தின் கேடுகளாக, இந்த சமுதாயத்தின் நோயை தீர்ப்பதற்கான வழியாக அவர் சொன்னதைத்தான் நாம் மீள் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.

அவர் மகத் மாநாட்டில் பேசினார், பல இடங்களில் பல செய்திகளை பதிவு செய்தார். என்றாலும், லாகூர் மாநாட்டில் அவர் ஆற்ற இருந்த உரை [ஆற்றிய உரை அல்ல] ஜாதி ஒழிப்பு சங்கத்தார் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இவரை தலைமை தாங்கி, தலைமை உரை ஆற்ற அழைக்கிறார்கள். இவர் உரையை எழுதி அனுப்புகிறார். அதை படித்துப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

இந்த ஜாதி ஒழிப்புக்காக அவர் சொல்லுகிற வழிமுறைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைய காரணம்… “இந்து சாஸ்திரங்களின் அதிகாரங்கள் தகர்க்கப்பட வேண்டும், அகமண முறை ஒழிக்கப்பட வேண்டும், இந்து மதம் தகர்ந்தாக வேண்டும், அர்ச்சகர் ஆகும் உரிமையை, உரிய பட்டயம் பெற்றால், அனைத்து ஜாதியினருக்கும் அளிக்க வேண்டும்” என்பதையெல்லாம் வழிமுறையாக சொல்கிறார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள சொல்லி கேட்கிறார்கள். “அதில் ஒரு கால் புள்ளியை மாற்றவும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று அம்பேத்கர் கேட்கிறார். மாநாட்டையே ஒத்திவைத்து விடுகிறார்கள்.

நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டுமானால், ஓவ்வொருவரும் படிக்க வேண்டியது அந்த நூல். அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார்.

அரசியல் நிலைப்பாடுகளில் இருவருக்கும் சிறுசிறு மாறங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார், பெரியார் தனித்தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார், பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்பையில் சொன்னார்கள்.

தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பை பிற ஜாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவவேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக்கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி எட்டாயிரம் ரூபாயை திருப்பி அனுப்பினார். பொதுக் கிணற்றில் நீர் எடுக்க போராட வேண்டுமே தவிர தனிக்கிணறு கூடாது என்பது பெரியர் கருத்து.

இன்னொரு பக்கம் அம்பேத்கர் தனிக்குடியிருப்பு வேண்டும் என போராட்டம் நடத்தினார். இப்படி பார்த்தால் அவர்களின் கோரிக்கைகளில் வேறுபாடுகள் போல தெரியும் ஆனால் அடி நீரோட்டமாய் இருவர் கருத்தும் ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை என்பதாகதான் இருந்தது.

பலபேர் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள் தனிமனித வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் தான் பெற்ற அறிவை, கல்வியை, பதவியை அனைத்தையும் சமூக மேம்பாட்டிற்காக, சமூக மாற்றத்திற்காக பயன்படுத்திய தலைவர்.

1935 இல் மராட்டியத்தில், பம்பாய் மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமிக்கிறார்கள். நியமனம் பெற்று அவர் ஆற்றிய முதல் உரையிலேயே, அங்கிருந்த நில உடைமையாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறார். ஆங்கில அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நியமன உறுப்பினாராக இருந்தும், நியமித்தவர்களையே விமர்சித்து பேசுகிறார். அவர் பதவி முக்கியம் எனக் கருதவில்லை.

அவர் சமஸ்கிருதம் படித்தார், வேதங்களை படித்தார், புராணங்களை படித்தார், சாஸ்திரங்களை படித்தார் எதற்கு பயன்படுத்தினார்? இந்திய சமுதயத்தில் ஜாதிய பிடியில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அறிவதற்கு படித்தார். மனுதர்மத்தைப் பற்றி அவர் செய்த ஆய்வு, யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்குரிய ஆய்வாகும்.

மனுதர்ம சாஸ்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்தில் அனைவருக்கும் இருந்த உரிமைகளை எடுத்துக் காட்டினார். அவர் ஓவ்வொரு நாட்டின் சரித்திரங்களை படித்து, அடிமைத் தனத்தைவிட கொடுமையானது தீண்டாமைதான் என்பதை பல அடிமைதனத்தோடு ஒப்பிட்டு எழுதினார்.

அம்பேத்கர் அவர்கள், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினாராக [இன்றைய மத்திய அமைச்சருக்கு இணையான பதவி] தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பதற்கு முன்னால் நாக்பூரில் ஒரு மாநாட்டை கூட்டினார். ‘கற்பி’, ‘போராடு’, ‘ஒன்றுசேர்’ என்ற வாசகங்களை பேசியது அந்த மாநாட்டில்தான். பெண்கள் உரிமைக்காக தனியாக ஒரு மாநாடு, சமத்துவ தொண்டர் படை என்ற ஒரு மாநாடு.

காந்தியோடு பலவாறு முரண்பட்டிருந்த அம்பேத்கர், இம்சைக்கு எதிரான சொல்தான் அகிம்சை என்று விளக்கம் சொன்னார். உன்னை ஒருவன் அடித்தால் இம்சை, அவனை நீ திருப்பி அடித்தால் அது அகிம்சை. ஜாதியவாதிகளால் தாக்கப்பட்டால் திருப்பித் தாக்கலாம் என்பதை தனது தொண்டர்களுக்கு சொன்னார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என விளம்பரம் செய்து அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக சுருக்கி விட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்றோ அரசியல் சட்டத்தை எழுதியவர் என்றோ சொல்வது அவருக்கு பெருமை அல்ல.

அவர் சொன்னார்…. “இந்து சமுதாயத்திற்கு வேதங்கள் தேவைப்பட்டது. தாழ்த்தப்பட்ட வியாசனை வைத்துகொண்டார்கள். அவர்களுக்கு இதிகாசம்  தேவைப்பட்டது. தாழ்த்தப்பட்ட வால்மீகியை வைத்து எழுதிக் கொண்டார்கள். இவர்களுக்கு அரசியல் சட்டம் தேவைப்பட்டது. என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள்”. அப்படிதான் சொன்னார்.

இவர்கள் எங்கு போனாலும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்திதான் தங்கள் உயர்வை நிறுவிக் கொண்டார்கள் என்று சொன்னார். நான் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவன்; ஆனால் மதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவர் அவர்தான், அவர் எழுதிய சட்டத்தைப் பற்றி நான் வாடகை குதிரையாக பயன்படுத்தப்பட்டேன், என்னுடைய விருப்பத்திற்கு எதிராக பலவற்றை எழுதினேன் என்று சொன்னார்.

பேனாவை பிடித்தது மட்டும்தான் என் கை, அதை ஆட்டிவித்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும் சொன்னார். ஆந்திர பிரிவினை விவாதத்தின்போது பேசினார்கள் “நீங்கள் தானே சட்டத்தை எழுதினீர்கள்” என்று. அவர் சொன்னார்…. “ஆம் நான் தான் எழுதினேன், அதை எரிக்கும் முதல் ஆளாகவும்  நான்தான் இருக்கப்போகிறேன்” என்று. அரசியல் வரைவு குழுவிற்குள் நுழைந்தபோது, என்னுடைய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தவிர, எனக்கு வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை என்று சொன்னார்.

‘தீண்டாமை’ ஒழிக்கப்பட்டு விட்டது, அதை எந்த வடிவில் பின்பற்றுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இருக்கிறது. சில இடங்களில் பின்பற்றலாம் என்பதற்கான சிறப்பு பொருளில்தான், தீண்டாமை என்ற சொல்லிற்கு போடப்பட்டிருக்கும் மேற்கோள் குறி என்று விளக்கம் சொன்னது உச்சநீதி மன்றம்.

“பெட்டி திருட்டு போனாலும் சாவி என்னிடம் இருக்கிறது என்றானாம் நாயர்” என்று மலையாள பழமொழி ஒன்று இருக்கிறது. அதுபோல அரசியல் சட்டத்திற்கு விளக்கம் சொல்பவர்கள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப்பட்ட அரசியல் சட்டங்களில் பலவற்றை அம்பேத்கர் செய்தார். எட்டு மணிநேர வேலை என்பதை வலியுறுத்தி, பிரன்ச் இந்தியாவில் பாண்டிச்சேரியில் மட்டும் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது. பிரிட்டிஸ் இந்தியாவில் யாரும் போராடவில்லை.

அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கான சட்டத்தை கொண்டுவந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் செய்ததா அது? பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கவேண்டும் என்பதை கொண்டுவந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்தான்.

அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டை வைத்தார், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வைக்கவில்லை என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

தொடரும்….