மறைந்த மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி நிகழ்வுகள் மன்னாரில் நடைபெறும் – மன்னார் ஆயர் தகவல்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் மன்னார் மறைமாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (1) காலை 11 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்டத்தில் சுடர் விட்டு பிரகாசித்த ஒளி விளக்கு இப்போது அணைந்து விட்டது. ஆயர் அவர்களின் திருவுடல் யாழ் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்படும்.

நாளை (April 2) காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் மறை மாவட்டத்திற்கு பவனியாக எடுத்து வரப்படும். பின்னர் மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் நாளை பெரிய வெள்ளி அன்று சிற்றாலயத்தில் மதியம் 2 மணியில் இருந்து அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து மக்கள்  இறுதி அஞ்சலியை செலுத்த முடியும். ஞாயிற்றுக்கிழமை மாலை 3  மணியளவில் ஒரு பவனியாக அவரது பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மாலை 3  மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படும்.

இறுதி சடங்கு கட்டுப்பாட்டுடன் இடம் பெற உள்ளமையினால் மக்கள் அதற்கு முன்னதாக தங்களின் இறுதி அஞ்சலியை மன்னார் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அல்லது பேராலயத்தில் செலுத்திக் கொள்ள முடியும்.

இறுதி இடக்க திருப்பலியில் அனைவரும் ஒன்று கூடக்கூடிய சந்தர்ப்பம் இல்லை.கொரோனா தொற்று நோய் காரணத்தினால் சுகாதார கட்டுப்பாடுகளுடன் திருப்பலி இடம் பெற உள்ளது.எனவே நேரத்துடன் வந்து ஆயருக்கு இறுதி அஞ்சலியை செலுத்திக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.