ஒரே நாளில்  38 போராட்டக்காரர்கள் மியான்மரில் சுட்டுக் கொலை

மியான்மரில் ஒரே நாளில்  38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த இராணுவக் கிளர்ச்சியும், அதைத் தொடர்ந்து போராட்டங்கள் பலவந்தமாக ஒடுக்கப்பட்டதும் சர்வதேசக் கண்டனங்களுக்கு உள்ளாயின. ஆனால், இவற்றை மியான்மர் ராணுவம் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போராட்டத்தில்  38 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ரத்தம் தோய்ந்த நாள் என்று வருணித்துள்ளது ஐ.நா.

மியான்மரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.

பாதுகாப்புப் படையினர், ரப்பர் குண்டுகள் மற்றும் உண்மையான குண்டுகளால் சுட்டனர் என்று சாட்சிகள் கூறுகின்றன.

இறப்புகளைப் பார்த்த பிறகு, ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. பிரிட்டன். மியான்மர் இராணுவத்துக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி யோசித்துவருவதாகத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

இராணுவக் கிளர்ச்சி நடந்ததில் இருந்து இதுவரை குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் தெரிவித்துள்ளார்.