‘எமது மக்களுக்கு  உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை’ – இரா.சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு உரையாற்றுகையில், “நவகிரி என்ற செயற்றிட்டத்தில் அவசர வான்கதவு என்பதொன்று காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டிலிருந்து அவசர வான்கதவு என்பது எமக்குக் கிடையாது. இவ்வாறான நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது குளத்தை அண்மித்த பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்படும். 2010ஆம் ஆண்டிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது, வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகின்றது. மக்கள் ஒவ்வெரு வருடமும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் முறையாகப் புனரமைக்கப்படாமை வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாகும்.

அத்துடன், மட்டக்களப்பு முகத்துவாரத்தை அண்மித்த ஆறுகளையும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். ஆழம் குறைந்தமையானது இதற்கான காரணம் ஆகும். குறைந்தளவு மழை பெய்தாலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வருடமும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதனால், எம்மக்களுக்கான வெள்ள நிவாரண நிதியானது ஒவ்வெரு வருடமும் ஒதுக்கப்பட வேண்டும். நவகிரியும், குளங்கள் புனரமைப்பும் இத்திட்டத்தில் காணப்படுகிறதா? ஆறுகள், மற்றும் குளங்களை முறையாகப் புனரமைத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

ரூகம் செயற்திட்டத்தின் MCM இனது அளவானது 58 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் தேவையான அளவானது MCM 90 ஆகச் செயற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இத்திட்டத்துக்கான போதியளவு கடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறாததன் காரணமாக இந்தச் செயற்றிட்டத்தை இடைநிறுத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்மையாகவே இத்திட்டமானது கைவிடப்படக் கூடாது. 90 MCM அளவினை நாங்களும், மக்களும் கேட்கின்றோம். இடை நடுவில் இத்திட்டத்தை நிறுத்தக் கூடாது.

இந்தத் திட்டமானது சரியான முறையில் செய்யப்படுமிடத்து 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ஏக்கர் அளவில் வருடங்களுக்கு இரண்டு முறை விவசாயம் மேற்கொள்ள முடியும். மீன் பிடித் துறையையும் அபிவிருத்தி செய்ய முடியும்.

இதைத் தவிர, பிற தொழில்களையும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், தற்போதுள்ள முந்தினா ஆறுத் திட்டத்தினை நிறுத்தியே இதனைச் செய்ய வேண்டும். இப்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது.

ஏனெனில், ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அகழ்வதைத் தவிர வேறு செயற்பாடுகள் இத்திட்டத்திற்காக முன்னெடுக்கப்படவில்லை, முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

இதேவேளை, எங்களுடைய உரிமை சார்ந்த கவனயீர்ப்புப் போராட்டமான பொத்துவில் முதல் பொலிகண்டிப் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர இவ்வாறான எமது மக்களுக்கு பயனுள்ள பொருளாதாரத்தை மற்றும் வாழ்வாதாரத்தைக் கட்டமைக்கும் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.