இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் – தயாநிதி மாறன்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு தி.மு.கவின் எம்.பி. தயாநிதி மாறன் இந்திய நாடாளுமன்றில் கடும் கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்.

“இலங்கையில் சீனா, பாகிஸ்தான் எல்லாம் வந்துவிட்டன. இந்தியா ஏன் அதனை கட்டுப்படுத்தவில்லை? ஒரு ராஜீவ் காந்திக்காக இன்னமும் 90 ஆயிரம் மக்களின் இழப்பை கருதாமல் இருக்க வேண்டாம். ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணையை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் மேற்படி மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் அந்த மீன்பிடிப் படகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை ரோந்து கப்பலின் மீது மோதியதில் கப்பல் சேதம் அடைந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியமையுடன் மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர் என்றும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.