சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு எழுத்தில் பதில் வழங்குவேன் – மாவை அறிவிப்பு

யாழ்.மாநகர சபையில்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்தமைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணம் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் மாவை சேனாதிராசா. அத்துடன் இது தொடர்பில் சுமந்திரனுக்குத் தான் எழுத்தில் பதிலளிக்கவுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ். மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுக் காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது சுமந்திரனின் குற்றச்சாட்டக்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சுமத்துவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஊடக சந்திப்பை நடத்தி தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் பற்றி பேசியிருக்கின்றார்.

இந்த விடயங்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்டிப் பேச வேண்டும். அதேவேளை, சுமந்திரன் குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பதிலளிக்க வேண்டும். இன்றைய ஒரு பத்திரிகையில் ஆசிரியர் என்னை இழிவுபடுத்தி எழுதியதால் அதற்கு நான் பதிலளித்திருக்கின்றேன்.

இன்று புத்தாண்டு. அதை எல்லாரும் கொண்டாட வேண்டும். அதே நேரம் கொரோனாவால் துன்பத்தில் இருக்கின்றனர். ஆகவே, கட்சி மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் நாளைக்கு கடிதத்தை எழுதி துன்பப்படுத்த நான் விரும்பவில்லை.

ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுக் கடிதம் தொடர்பில் எதிர்வரும் 2ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கை கொடுப்பபேன். ஏனெனில் வருடத்தின் முதல் நாளில் அரசியல் குழப்பங்கள், குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பதில் கொடுக்க நான் விரும்பவில்லை. அதற்கு எனது மனமும் இட மளிக்கவில்லை.

இதேவேளை, யாழ்.மாநகர சபை மேயர் விடயத்தில் நாள் தன்னிச்சையாக எடுத்த முடிவுஎன்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன். கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தான் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளோம். உறுப்பினர்கள் அனைவரும் ஆனோல்ட்டையே விரும்பினர். அவரையே ஆதரிப்பதென அனைவரும் தீர்மானம் எடுத்தி ருந்தனர்” என்றார்.