இனத்திற்காக உயிர்நீத்தவா்களை நினைவுக்கூருவதை யாராலும் தடுத்து விட முடியாது -ப.கருணாவதி

இனத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூருவதை யாராலும் தடுத்து விட முடியாது என வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கப் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இனத்துக்காக தங்களது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை  நினைவு கூறுவதை தடுக்க முடியுமா?

எங்களது பிள்ளைகளை நினைவு கூருவதனை எவராலும் தடுக்க முடியாது. எங்களது வாழ்க்கைக்காக வீரகாவியமான எமது பிள்ளைகளை நினைவு கூருவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதனை தடுக்கும் உரிமை எந்ததொரு நாட்டிலும் இல்லாத நிலையில், இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்பது ஏற்புடையதல்ல.

எனவே, அனைவரும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக உலகறிய செய்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.