சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை; சரத் வீரசேகர

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார்.

“சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயல்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;

“புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. இன்றும் புலிகளின் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. புலியின் வாலையே நாங்கள் அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

எனவே, நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாளமுடியும். இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்” என்றார்.