இன்று (13) மாலை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் அவசரமாக இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரிஷாட் பத்தியூன் வன்முறையில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவரை கண்டதும் சுட வேண்டும் என மீண்டும் மீண்டும் உரத்த குரலில் சத்தமிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அச்சமடைந்த சிறீலங்கா பிரதமர் கண்டதும் சுடுவதற்கான உத்தரவை தான் பிறப்பிப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் சிறீலங்கா இராணுவத் தளபதிக்கு கட்டதும் சுடும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் குருநாகல் மாவட்டத்தில் தற்போது வன்செயல்கள் உக்கிரமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் 6 பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெட்டிபொலவில் முஸ்லீம் மக்களின் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன்னர் மினுவாங்கொடையிலும் முஸ்லீம் இனத்தவரை சிங்கள இனத்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
வன்முறையில் ஈடுபடும் சிங்கள இனத்தவர்களை தடுக்காது சிறீலங்கா காவல்துறையினரும், இராணுவத்தினரும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தென்னிலங்கையின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்திருந்த சிறீலங்கா அரசு தற்போது நாடு முழுவதும் இரவு 9 மணியில் இருந்து காலை 4 மணிவரையிலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது நாட்டின் பாதுகாப்பு முற்றாக சீர்குலைவு நிலைக்குச் சென்றுள்ளதை இது காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா வெளிநாட்டுப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளதால் சிறீலங்காவில் தாக்குதல் நடைபெறலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசு நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புச் சபை கூட்டத்தின் பின்னர் பேசிய ரணில் விக்கிரம சிங்கா வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றால் நாட்டின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் வட மேற்கு மகாணங்களில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்பவே இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அதிகாரங்களை நாம் படையினருக்கு வழங்கியுள்ளோம்.
தற்போதைய வன்முறைகள் வெசாக் பண்டிகையை பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.