எனது அனுமதியின்றி வடக்கில் அபிவிருத்தியில்லை;அங்கஜன் ஆணவம்

எனது அனுமதி இன்றி எந்த அபிவிருத்தி திட்டங்களும் வடக்கில் இடம்பெறக்கூடாது என சிறீலங்கா அரசினால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரான சிறீலங்கா ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். அங்கஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) அவர் யாழ் அரச அதிபருக்கு எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெறும் எல்லா அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் தனக்கு தகவல்களை தருமாறும் அவர் யாழ் அரச அதிபரை கோரியுள்ளார்.

தனது அலுவலகத்தின் இணைப்பு அதிகாரியாக தனது தந்தையாரை நியமித்துள்ள அங்கஜன் அவருக்கு ஒரு அலுவலகத்தை தருமாறும் அரச அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, அங்கஜன் கோத்தபாயாவின் நேரடியான வழிநடத்தலில் இயங்கிவருவதால் புலம்பெயர் தேசங்களில் இருந்து வடபகுதியில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு மிகப்பெரும் ஆபத்துக்கள் நேரலாம் எனவும் புலம்பெயர் மக்கள் பலர் தமது பணத்தை இழக்க நேருடும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்